சரப்ஜித்தை காக்க உலக நாடுகள் உதவ கருணாநிதி கோரிக்கை
சென்னை: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கைக் காக்க இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் பாகிஸ்தானை நிர்ப்பந்திக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி - பதில் பாணி அறிக்கையில்,
மரண தண்டனை குறித்து நான் எனது கருத்துக்களை பலமுறை தெளிவாக சொல்லியுள்ளேன். இந்த தண்டனை உலக அளவில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எனது எண்ணம்.
சரப்ஜித் சிங் கடந்த 17 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் வாடி வருகிறார். இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அவருடைய மரண தண்டனை ஏப்ரல் 30ம் தேதி வரைக்கும் தள்ளி போடப்பட்டது. தற்போது அந்தத் தண்டனை மேலும் ஒரு மாதத்திற்குத் தள்ளிப் போடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அதை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.
சரப்ஜித் சிங்கின் உயிர் விரைவில் காக்கப்பட வேண்டும். இதற்கு இந்தியா மட்டும் குரல் கொடுத்தால் போதாது. உலக நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானை வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் சரப்ஜித் சிங் உயிரைக் காக்க முடியும்.
வெளியுறவு விவகாரம் தொடர்பான தமிழக அரசின் கருத்துக்கள் அனைத்தும், மத்திய அரசின் கொள்கைகளின் பிரதிபலிப்பாகத்தான் உள்ளன என்று கூறியுள்ளார் கருணாநிதி.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு:
தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக சிடி ஆதாரம் இருப்பதாக அதிமுக கூறியுள்ளது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அதிமுகவினரின் மிரட்டல் அரசியலுக்கு நான் ஒருபோதும் பயந்ததே இல்லை.
கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் நடந்த பெருமளவிலான ஊழல்கள் குறித்த கோப்புகளை நான் எடுத்து காட்டினால் இவர்கள் எல்லாம் எங்கே போய் ஒளிந்து கொள்வார்களோ என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழி:
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாகக் கொண்டு வருவது பற்றி மத்திய அரசுக்கு தாங்கள் வைத்த வேண்டுகோள் என்னவாயிற்று என்ற கேள்விக்கு முதல்வர் அளித்துள்ள பதிலில்,
இந்தக் கோரிக்கை பற்றி மத்திய சட்ட மந்திரி எச்.ஆர்.பரத்வாஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, சென்னை ஐகோர்ட்டின் மொழியாக தமிழை ஆக்க வேண்டுமென்ற தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் கோரிக்கைக்கு மத்திய அரசு எந்த விதமான எதிர்ப்பையும் தெரிவிக்காது என்றும், மத்திய அரசு இந்தப் பிரச்சினையை ஆதரவாகவே அணுகும் என்றும் சொல்லியிருக்கிறார்.
டெல்லியிலே நடைபெற்ற ஒரு மாநாட்டில் படிக்கப்பட்ட எனது பேச்சில் இந்தக் கோரிக்கையை மத்திய அரசுக்கு மீண்டும் நினைவூட்டி, நமது சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதின் தொடர்ச்சியாக நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் தான் மத்திய சட்டத் துறை மந்திரி இந்தக் கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
பல மாதங்களாக மத்திய அரசின் ஒப்புதலுக்காக இந்தக் கோரிக்கை காத்துக் கொண்டுள்ளது என்பதை நினைவிலே கொண்டு, அமைச்சர் உறுதி அளித்திருப்பதைப் போல விரைவில் நல்லதொரு அறிவிப்பை மத்திய அரசின் சார்பில் வெளியிடுவார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
குறுகிய காலத்தில் விஜய்காந்துக்கு தெரிந்தது...:
ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்காக 1300 கோடி ரூபாயை ஏன் ஜப்பானுக்குப் போய் வாங்க வேண்டும், இருந்த இடத்தில் இருந்தே மிரட்டி வசூல் செய்துவிடலாமே? அரசியல் கட்சிகளுக்கு பணம் சப்ளை செய்வதற்காகவே இங்கே 2 பேர் இருக்கிறார்கள். அரசியலுக்கு வந்த பிறகு தான் எனக்கு இதெல்லாம் தெரியும்' என்று தே.மு.தி.க. தலைவர் கூறியதாக "இந்தியா டுடே'' எழுதியிருக்கிறதே? என்ற கேள்விக்கு,
அரசியலில் இத்தனை ஆண்டுக் காலமாக இருக்கும் எனக்கு அந்த 2 பேர் யாரென்று தெரியவில்லை. ஆனால் அவருக்கு தெரிந்திருக்கின்றது. அப்படியே தெரிந்தாலும், அவர் சொல்வதைப் போல யாரையும் மிரட்டி வசூல் செய்கிற பழக்கம் எனக்கு வராது. அரசியலுக்கு வந்த பிறகு குறுகிய காலத்தில் இதைப்போல பல விஷயங்கள் அவருக்கு தெரிந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் தமிழகத்திலும், கர்நாடகத்திலும் நடந்து வந்த வன்முறையைத் தடுக்கும் நோக்கில்தான் தற்காலிகமாக இந்தத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இது தற்காலிக முடிவுதான் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications