வாசனுக்கு ஆப்பு வைத்த அருண்குமார்:'உபயம்'-பிரபு!
வழக்கமாக நீலகிரி எம்.பி. தொகுதியில் தான் போட்டியிடுவார் பிரபு. ஆனால், வரும் தேர்தலில் கோவைக்கு மாற அவர் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து கோவை தொகுதியில் இப்போதே தனது கோஷ்டியைச் சேர்ந்த ஆட்களை நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளார். தமிழக காங்கிரஸ் பார்வையாளரான அருண்குமாரின் உதவியோடு கோவை மாவட்ட நிர்வாகிகளை மாற்றினார் பிரபு.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது ஜி.கே. வாசன் கோஷ்டினர் தான். த.மா.காவில் இருந்த இவர்கள் வாசனின் ஆதரவோடு கட்சிப் பதவிகளைப் பிடித்தவர்கள்.
ஆனால், அவர்களுக்கு கல்தா கொடுத்த அருண்குமார், பிரபு சொன்ன ஆட்களை நியமித்துள்ளார்.
இதனால் வாசன் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். காங்கிரஸ் தலைமைக்கு தனது எதிர்ப்பைக் காட்ட தயாராகி வரும் அவர் முதல் கட்டமாக தனது ஆட்களை போராட்டத்தில் இறக்கி விட்டுள்ளார்.
இதையடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்ட மாவட்டத் தலைவர்களான கோவை தங்கம் எம்.எல்.ஏ, குனியமுத்தூர் ஆறுமுகம், பி.வி.மணி ஆகியோர் தலைமையில் அவர்களது ஆதரவாளர்கள் கோவையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இவர்களுக்கு ஆதரவாக வாசன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தி்ல் பேசிய பலரும் காங்கிரசில் இதே நிலை நீடித்தால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸை தொடங்க வேண்டிய நிலை ஏற்படும் என கட்சி மேலிடத்துக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தப் பேச்சுகளை ரகசியமாக டேப் செய்த பிரபுவின் ஆட்கள் அதை பிரபு மூலமாக அப்படியே டெல்லி தலைமைக்கு போட்டுக் கொடுத்துள்ளனர்.
தலைமைக்கு எதிராக பேசிய இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந் நிலையில் வாசனின் எதிர்ப்பால் மேலும் சில மாவட்டச் செயலாளர்களை மாற்றும் திட்டத்தை காங்கிரஸ் தலைமை ஒத்தி வைத்துவிட்டது.
இதற்கிடையே சென்னையில் நிருபர்களை சந்தித்த வாசன் தனது கோபத்தை மறைத்தபடி பேசினார். மீண்டும் த.மா.காவை தொடங்க வேண்டும் என உங்கள் ஆதரவாளர்கள் குரல் தந்து வருகிறார்களே என்று கேட்டதற்கு,
காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை அனைவரும் ஒற்றுமையாக இருந்து எதிர்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதுதான் ஒரே லட்சியம் என்றார்.
இதற்கிடையே திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. அதில், காங்கிரஸ் கட்சியை பிளவு படுத்தும் நோக்கத்தில் மீண்டும் த.மா.கா. தொடங்குவோம் என்று கூறுவோரை உடனே கட்சியை விட்டு நீக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் என்றாலே கோஷ்டி தானே..