கோடை உஷ்ணத்தில் தகிக்கும் தமிழகம்-மே 3 முதல் 'கத்திரி'!
சென்னை: தமிழகத்தில் மிகக் கடுமையான வெயில் வீசத் தொடங்கிவிட்டது.
வழக்கமாக தமிழகத்தில் பிப்ரவரி மாத இறுதியிலேயே சூரியன் சுட்டெரிக்கும். ஆனால், இம்முறை பருவம் தவறி மார்ச் மாதம் முழுவதும் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது.
ஆனால், இந்த பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு காத்திருந்த பயிர்கள் நாசமாகி விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.
கோடையின் ஆரம்பத்தை மக்கள் கடும் வெயில் இல்லாமல் அனுபவித்தனர். ஆனால், மெதுவாக மழை நிற்கத் தொடங்கியதோடு வெயிலும் பின்னி எடுக்க ஆரம்பித்துவிட்டது.
கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தை வறுக்க ஆரம்பித்துவிட்டது கோடை. வெயிலுக்கு பேர் போன வேலூரில் வெயில் அளவு 100 டிகிரியைத் தாண்டிவிட்டது. கடும் வெயிலால் அப் பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதே போல தர்மபுரி, சேலம், தஞ்சை போன்ற மாவட்டங்களிலும் வெயில் 100 டிகிரியை தொட்டு விட்டது. நேற்று முன்தினம் தஞ்சை, வேலூரில் வெயில் 102.2 டிகிரி அளவுக்கு இருந்தது. சென்னை, தர்மபுரி, சேலத்தில் 100.4 டிகிரியைத் தொட்டது.
இந் நிலையில் வரும் மே மாதம் 3ம் தேதி சனிக்கிழமை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. இந்த கத்திரி வெயில் மே 28ம் தேதி வரை நீடிக்கும்.
இதனால் 26 நாட்களுக்கு கத்திரி கொடுமை செய்யவுள்ளது.
தென் தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் வைகை, பெரியாறு அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைகளும் நிரம்பின.
இந் நிலையில் இப்போது மழை அறவே நின்றுவிட்டதால் அணைகளுக்கு நீர்வரத்தும் சுத்தமாக நின்றுவிட்டது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 98.5 அடியாகவும், பெரியாறு அணையின் நீர்மட்டம் 132 அடியாகவும் வைகை அணையின் நீர்மட்டம் 70.64 அடியாகவும் உள்ளது. இந்த அணைகளுக்கு இப்போது நீர் வரத்து ஏதும் இல்லை.
ஆனாலும் போதிய அளவு நீர் இருப்பதால் இந்தக் கோடையில் பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் பிரச்சனை இருக்காது என்பது தான் பெரிய நிம்மதி தரும் விஷயம்.