விவேகானந்தர் இல்லத்தை காலி செய்ய ராமகிருஷ்ண மடத்துக்கு நெருக்கடி
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தை வரும் 24ம் தேதிக்குள் காலி செய்து விடுமாறு, ராமகிருஷ்ணா மடத்துக்கு தமிழக அரசுத் தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ராமகிருஷ்ணா மட நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முன்பு கெர்னன் கோட்டை என்றும், பின்னர் ஐஸ் ஹவுஸ் என்றும் அழைக்கப்பட்ட பழமையான கட்டடம்தான் விவேகானந்தர் இல்லம். வங்கக் கடலை நோக்கி, மெரீனா கடற்கரையோரம் அமைந்திருக்கும் இந்த எழில் மிகு கட்டடம் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.
1897ல் அமெரிக்காவின் சிகாகோ நடந்த சர்வதேச மாநாட்டில் பேசிவிட்டு நாடு திரும்பிய விவேகானந்தர் இந்த கட்டடத்தில்தான் பிப்ரவரி 6 முதல் 15ம் தேதி வரை 9 நாட்கள் தங்கியிருந்தார்.
இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐஸ் கட்டிகள் இந்த கட்டிடத்துக்கு கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது. அதன் பின்னர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதனால்தான் இதற்கு ஐஸ் ஹவுஸ் என்ற பெயர் வந்தது.
விவேகானந்தர் இந்த இல்லத்திற்கு வந்து நூறாண்டுகள் ஆனதையொட்டி 1999ம் ஆண்டு, விவேகானந்தர் இல்லத்தை, ராமகிருஷ்ணா மடத்திற்கு 10 ஆண்டு குத்தகைக்கு விட்டது அப்போதைய திமுக அரசு. இந்த இல்லத்தில் விவேகானந்தர் குறித்த கண்காட்சியகத்தை நடத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
அதன்படி அன்று முதல் இங்கு விவேகானந்தர் குறித்த நிரந்தர கலாச்சாரக் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. ரூ. 65 லட்சம் செலவில் இந்தக் கண்காட்சிக் கூடத்தை ராமகிருஷ்ணா மடம் அமைத்துள்ளது.
கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த கண்காட்சிக் கூடம் நல்ல சிந்தனை விருந்தாக அமைந்துள்ளது. பத்து ஆண்டு குத்தகை முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மேலும் 30 ஆண்டு குத்தகைக்கு இந்த கட்டடத்தைக் கேட்க ராமகிருஷ்ண மடம் தீர்மானித்திருந்தது.
ஆனால் இப்போது விவேகானந்தர் இல்லத்தைக் காலி செய்யுமாறு தற்போது நிர்ப்பந்தம் எழுந்துள்ளதாம்.
கடந்த 14ம் தேதி மாலை 6.15 மணிக்கு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அன்பழகன், கண்காணிப்புப் பொறியாளர் அண்ணாதுரை ஆகியோர் விவேகானந்தா இல்லத்திற்கு வந்து, ராமகிருஷ்ணா மட நிர்வாகி சுவாமி சகஜானந்தாவை சந்தித்து, கிரீன்வேஸ் சாலையில் உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம். இதை காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ராமகிருஷ்ணா மட நிர்வாகிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சட்டப்பூர்வ ஆலோசனைகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
மத்திய அரசு செம்மொழி ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவவுள்ளது. இந்த மையத்தை விவேகானந்தர் இல்லத்தில் அமைக்க அரசு விரும்புவதாக தெரிகிறது. எனவேதான் ராமகிருஷ்ணா மடத்தை, இடத்தை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் ராமகிருஷ்ணா மடம் செயல்பட்டு வந்தது. பின்னர் 1906ம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் ஏலத்தில் விடப்பட்டு விட்டது. இதையடுத்து இந்த இடத்தைக் காலி செய்து விட்டு தற்போது மயிலாப்பூரில் உள்ள இடத்திற்கு இடம் பெயர்ந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சிக்கலை விவேகானந்தர் இல்லத்தில் சந்தித்துள்ளது ராமகிருஷ்ணா மடம்.