கடும் வெயிலுக்கு ரயில்வே கேங்மேன், மூதாட்டி பலி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கடும் வெயிலைத் தாங்க முடியாமல், ரயில்வே கேங்மேன் ஒருவர் பரிதாபமாக பலியானார். அதேபோல பொன்னேரியில் ஒரு மூதாட்டி உயிரிழந்தார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கேங்மேனாக இருந்தவர் தனுஷ் (49). இவர் நேற்று கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது கடும் வெயிலில் அவருக்கு சன் ஸ்டிரோக் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உள்ள முட்புதரில் ஒரு மூதாட்டி உயிரிழந்து கிடந்தார். அவருக்கு 60 வயதிருக்கும். வெயில் கொடுமையால் நடக்க முடியாமல் செடிகளுக்குள் விழுந்து அந்தப் பாட்டி இறந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலுக்கு ஏற்பட்டுள்ள முதல் பலி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. பகல் முழுவதும் வெளியில் நடமாடவே முடியாத அளவுக்கு வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. சராசரி வெப்ப நிலையின் அளவு 100 டிகிரியை எட்டிக் கொண்டிருக்கிறது.
விரைவில் அக்னி நட்சத்திரம் தொடங்கவுள்ளதால் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.












Click it and Unblock the Notifications