உட்லண்ட்ஸ் டிரைவ் இன்: கிருஷ்ணமூர்த்தி புது மனு தாக்கல்
சென்னை: அரசு நிலத்தை ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்த உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டல் வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி 'தோட்டக்கலை' கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில், ஜெமினி மேம்பாலம் அருகே தமிழக அரசின் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்ைத கடந்த காலத்தில், கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தோட்டக்கலை கழகத்திற்கு அரசு குத்தகைக்கு விட்டிருந்தது.
இந்த இடத்தை குத்தகைக்கு வாங்கிய கிருஷ்ணமூர்த்தி, அந்த இடத்தை உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலுக்கு உள் வாடகைக்கு விட்டிருந்ததாக தெரிகிறது.
ஆண்டுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் வாடகை வரக் கூடிய இந்த இடத்தை, மாதத்திற்கு வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்கு அத்த வாடகைக்கு விட்டிருந்தனர். இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து நிலத்தைத் திரும்பப் பெற கடந்த 1989ம் ஆண்டு அரசு உத்தரவிட்டது. ஆனால் அதை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சமீபத்தில், தமிழக அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது.
இதையடுத்து ஹோட்டலுக்கு செல்லும் நுழைவாயில்கள் மூடி சீல் வைக்கப்பட்டன. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில், உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இதையடுத்து இந்த இடம் தமிழக அரசுக்கு முற்றிலும் சொந்தமாக உள்ளது. இந்த இடத்தில், ஊட்டி, பெங்களூரில் உள்ளதைப் போல பிரமாண்டமான தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறிய தீர்ப்பில் என்னைப் பற்றி சில ஆட்சேபகரமான கருத்துக்கள் உள்ளன. எனக்கு குத்தகை கால அவகாசம் இன்னும் இருக்கிறது. எனவே தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமா என்பது பின்னர் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications