லாகூர் சிறையில் சரப்ஜித்துடன் குடும்பத்தினர் சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

Sarabjit Family
லாகூர்: லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங்கை அவரது குடும்பத்தினர் நேற்று சந்தித்தனர். 18 ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்த இந்த சந்திப்பு மிகவும் உணர்ச்சிமயமாக இருந்தது.

இந்தியாவுக்கு உளவு பார்த்தார் என்று கூறி சரப்ஜித் சிங்கை 18 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரது கருணை மனுவை அதிபர் முஷாரப் நிராகரித்து விட்டார். இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி அவர் தூக்கிலிடப்படுவார் என அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சரப்ஜித் சிங்குக்கு கருணை காட்ட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். மத்திய அரசும், பாகிஸ்தான் அரசுக்கு கோரிக்கைககள் விடுத்தது. பாகிஸ்தானில் உள்ள மனித உரிமை அமைப்புகளும் சரப்ஜித்துக்காக போராடின.

இந்த நிலையில் மே 1ம் தேதி வரை சரப்ஜித் சிங் தூக்கிலிடப்படுவதை தள்ளி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதனால் சரப்ஜித் சிங் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். தற்போது மே 1ம் தேதி நெருங்கி வருவதால் மீண்டும் சரப்ஜித் சிங் குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது. இம்முறை தூக்கு தண்டனை மேலும் சில நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை பாகிஸ்தான் அரசு மறுத்தது.

இந்தச் சூழ்நிலையில், சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் லாகூர் சென்று நேற்று அவரை சிறையில் சந்தித்தனர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சந்திப்பு நடந்துள்ளது. மனைவி சுக்ப்ரீத் கெளர், சகோதரி தல்பீர் கெளர், அவரது கணவர் பல்தேவ் சிங், மகள்கள் சுவந்தீப், பூனம் ஆகியோர் லாகூரில் உள்ள கோட்லக்பாத் சிறையில் சரப்ஜித்தை சந்தித்துப் பேசினர்.

தனது இளைய மகள் பூனத்தை இப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறார் சரப்ஜித் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது குடும்பத்தினரையும், மனைவி, மக்களையும் பார்த்த சரப்ஜித் சிங் கண்ணீரை அடக்க முடியாமல் அழுதுள்ளார். சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் விடை பெற்றுச் சென்றபோதும் அவர் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அழுதார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மொத்தம் இரண்டரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் சிறைக்கு வெளியே தல்பீர் கெளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு சரப்ஜித் சிங்கை சந்தித்தோம். இது மிகவும் உணர்ச்சியமான தருணம். ஒரே நேரத்தில் சோகமும், சந்தோஷம் மாறி மாறி வந்து கொண்டிருக்கிறது.

தனது அப்பாவை பூனம் இப்போதுதான் முதல் முறையாக பார்த்தாள். நல்லது நடக்கும், நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வெளியே வந்துள்ளோம் என்றார் தல்பீர்.

இந்த நிலையில் தற்போதைக்கு மே 1ம் தேதி சரப்ஜித் தூக்கிலிடப்படுவது உறுதி என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சரப்ஜித் சிங்குக்கு கருணை காட்டக் கோரி முன்னாள் மனித உரிமைத் துறை அமைச்சர் அன்சார் பர்னி, அதிபர் முஷாரப்புக்கு மனு அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் கிலானிக்கும் அவர் கோரிக்கை மனு அனுப்பவுள்ளார்.

அதில் தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றி சரப்ஜித் சிங்குக்கு கருணை காட்ட வேண்டும் என்று அவர் கோரவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+