வாலிபர் கொலை-அதிகாரிகள் முன் உடல் தோண்டி எடுப்பு
வள்ளியூர்: கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
வள்ளியூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள குப்பை தொட்டி அருகே நேற்று காலை மனித மண்டை ஓடு துண்டு ஒன்று ரத்தக்கறையுடன் கிடந்தது. ரத்தம் தோய்த்த கால் தடங்களும் அங்குள்ள முள் செடியில் ரத்த கறை படிந்த சட்டையும் அருகில் உள்ள குட்டையில் ரத்தம் தோய்த்த பாறாங்கல்லும் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
மறவர் காலனி பின்புறம் உள்ள செங்கல் சூளைக்கருகே ஒரு உடலை சிலர் புதைத்துவிட்டு சென்றதாக போலீசுக்கு தகவல் கிடைத்து. அங்கு சென்று பார்த்தபோது, அது புதிதாக தோண்டப்பட்ட குழி என்பது தெரியவந்தது. மாரியம்மன் கோயில் தெருவில் கொலை செய்யப்பட்டவரின் உடலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
இதையடுத்து உடலை தோண்டி எடுப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். எஸ்பி திகனர் உத்தரவின்படி தாசில்தார் செல்வராஜ், டிஎஸ்பி சிதம்பரதாணு ஆகியோர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
இதற்கிடையே அதே ஊரைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் பகவதியப்பன் என்பவரை கடந்த சில நாட்களாக காணவில்லை. எனவே பகவதியப்பன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகக்கின்றனர்.
அடையாளம் தெரியாத அளவுக்கு உடல் சிதைந்துவிட்டதால் பரிசோதனைக்கு பிறகே யார் என்பது தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.