கருணாநிதிக்கு போட்டி கவிதை-அதிமுக வக்கீல்களுக்கு கோர்ட் கண்டனம்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் கவிதைக்குப் போட்டியாக துண்டுப் பிரசுரம் மூலம் போட்டிக் கவிதையை பிரசுரித்த அதிமுக வக்கீல்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ் வருடப் பிறப்பை சித்திரை 1ம் தேதிக்குப் பதில் தை முதல் நாள் கொண்டாட வேண்டும் என்பது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதுதொடர்பாக கவிதை ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில் அதிமுகவைச் சேர்ந்த வக்கீல் பாலசுப்ரமணியம் என்பவர் போட்டிக் கவிதை ஒன்றை வெளியிட்டு அதை துண்டுப் பிரசுரம் மூலம் விநியோகித்தார்.
இதையடுத்து அவர் மீதும், பிற அதிமுக வக்கீல்கள் மீதும் எஸ்பிளனேடு போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாலசுப்ரமணியம், ராஜேந்திர நரசிம்மன், முத்துக்குமார், விஜயக்குமார், ரமேஷ் ஆகிய அதிமுக வக்கீல்கள் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி கே.என். பாட்ஷா விசாரித்தார். பின்னர் அதிமுக வக்கீல்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதேசமயம், அதிமுக வக்கீல்களின் போட்டிக் கவிதைக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இது வேதனை அளிப்பதாகவும், அதிர்ச்சி தருவதாகவும் உள்ளது. தேவையற்ற வார்த்தைகளால் இந்த கவிதை எழுதப்பட்டுள்ளது.
மேலும் வக்கீல்களின் உன்னதத்தை கெடுக்கும் வகையில் உள்ளது. இதுபோன்ற தொழிலில் ஈடுபடுவோர் இப்படிப்பட்ட தேவையற்ற வார்த்ைதகளால் கவிதை எழுதியிருக்கக் கூடாது. வக்கீல் தொழிலுக்கே இது களங்கம் விளைவிப்பதாக உள்ளது. கண்ணியத்தைக் கட்டிக் காக்க வேண்டிய வக்கீல்கள் இதுபோன்று எழுதியிருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்.
ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளது. இருப்பினும் அந்த சுதந்திரத்தை களங்கப்படுத்தும் வகையில், மற்றவர்கள் தூண்டி விடக் கூடாது. இனி இதுபோன்ற கவிதையை எழுத மாட்டார் என்று மனுதாரர் சார்பு வக்கீல் உறுதி அளித்துள்ளார். எனவே இவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.