பெற்றோருக்கு கோவில் கட்டி வழிபடும் விவசாயி!
புளியங்குடி: நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே விவசாயி ஒருவர் தனது பெற்றொருக்கு கோவில் கட்டி வழிபடுகிறார்.
வாசுதேவநல்லூர் அருகே உள்ள நாரணபுரம் என்ற தேசியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருமலையாண்டி என்ற சின்னசாமி. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
இவரது தந்தை அக்கப்பதேவர், தாய் பேச்சியம்மாள். இவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலம் அருகிலுள்ள அருளாச்சி கிராமத்தில் உள்ளது. பெற்றொர் மறைவிற்கு பின் சின்னசாமி 15 ஏக்கர் நிலத்தில் தென்னை, எலுமிச்சை, நெல் பயிரிட்டு பிழைப்பு நடத்தி வருகிறார்.
தாய், தந்தை மீது அளவுக்கு கடந்த பக்தியால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோப்பு வீட்டின் அருகில் இருவருடைய உருவசிலையையும் நிறுவி கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்.
அக்கப்பதேவர், பேச்சியாம்மாள் சிலைகள் ராஜா, ராணியை போல கம்பீரமாக உள்ளதை சுற்று வட்டார கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர். தாய், தந்தையின் நினைவாக கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் விழா நடத்தி அன்னதானமும் செய்து வருகிறார் சின்னசாமி. இதுமட்டுமின்றி பொது நலனிலும் அக்கறையுடன் செயல்படுகிறார்.
வாசுதேவநல்லூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலை உச்சானி பகுதியில் உள்ள செண்பகவல்லியாறு அணைக்கட்டை கேரளா மாநிலத்தின் பிடியிலிருந்து தமிழகத்திற்கு பெற்று தர நீதிமன்றங்களின் படியேறி வெற்றி பெற்றுள்ளதாகவும் விரைவில் நீதிமன்ற தீர்ப்பு நகலை வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
பெற்றோரை சுமையாக நினைத்து முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் பிள்ளைகளுக்கு மத்தியில் இவரின் செயல் பாராட்டுக்குரியது.












Click it and Unblock the Notifications