செக்ஸ் கல்வி-5000 ஆசிரியர்களுக்கு பயிற்சி
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி நடத்துவது தமிழகத்தில் இதுவரை 5,000 ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் டீன் ஏஜ் பருவத்தில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு செக்ஸ் பற்றிய அடிப்படை விஷயங்களை கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு வளர் இளம்பருவ கல்வி' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில் டீன் ஏஜ் பருவத்தில் ஏற்படும் பாலுணர்வு சிந்தனை, உடல் அளவில் ஏற்படும் மாற்றங்கள், தவறான பழக்கங்கள், செயல்கள், அவற்றால் ஏற்படும் பாதிப்புகள், செக்ஸ் சம்பந்தமான நோய்கள், உடல் கூறு, பொதுவான ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு சொல்லித் தரப்படும்.இதற்காக அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் அடிப்படை பயிற்சி அளித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் ஒருவர் என்ற வீதத்தில் சுமார் 5,000 ஆசிரியர்களுக்கு இதுவரை இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியை வரும் கல்வி ஆண்டிலிருந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கென பாடத் திட்டமோ பாடப் புத்தகமோ தயாரிக்கப்படவில்லை.
ஆசிரியர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சியைக் கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்துவர்.