இன்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
தமிழகம் முழுவதும் கோடை வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது. அதிலும் கோடையின் உக்கிரமான அக்னி நட்சத்திரகம் இன்று தொடங்கியது. கத்தரி தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை, வேலூர், திருச்சி, புதுச்சேரி, கடலூர் ஆகிய ஊர்களில் வெயில் சென்சுரியை தாண்டி வாட்டி வதைக்கிறது.
காலை 7 மணிக்கே தொடங்கிவிடும் வெயிலின் உக்கிரம் நேரம் செல்ல செல்ல சுட்டெரித்து விடுகிறது. சாலைகளில் நடமாட முடியாத அளவுக்கு வெயிலும், அனல் காற்றும் வீசுகிறது.
மக்கள் கோடை வெயிலை சமாளிக்க இளநீர், மோர், தர்பூசணியை ஆகியவற்றை சாப்பிட்டு தாகம் தணிக்கின்றனர். ஆனால் இவற்றின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இளநீர் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. தர்பூசணி ஒரு பீஸ் ரூ.4 வரை விற்கப்படுகிறது.
பெருநகரங்களில் ஏசி, பிரிட்ஜ், ஏர்கூலர் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளது.
காலை முதல் மாலை வரை வெப்பமும், அனல் காற்றும் வீசும் கத்தரி வரும் 28ம் தேதி வரை நீடிக்கும். வசதி படைத்தவர்கள் மலை பிரதேசங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர்.
ஆற்காட்டார் மறுத்தாலும் தமிழகத்தில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கி வருகிறது.
இடையிடையே வங்கக் கடலில் தாழ்வு மண்டலம் உருவாகி அவ்வப்போது மழையும் பெய்தாலும் மழை நின்றவுடனேயே வெப்பம் உக்கிரமாகிவிடுகிறது.