அரசு ஆம்புலன்ஸ் மாற்றம்: மக்கள் சாலை மறியல்
நெல்லை: நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் அரசு மருத்துவமனையின் ஆம்புலன்ஸை, தென்காசிக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தனியார் அறக்கட்டளை மூலம் ஆம்புலன்ஸ் வேன் ஒன்று வழங்கப்பட்டது.
இந்த வேன் 24 மணி நேரமும் மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் இதை திடீரென்று தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர்.
ஏற்கெனவே மேலப்பாளையம் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் தேவையான சிகிச்சை பெற முடியவில்லை. இந்நிலையில் ஆம்புலன்ஸையும் பறிக்க முயல்வதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில் இந்திய யூனியன் மூஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மீரான் மைதீன் தலைமையில் தவ்ஜீத் ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மேலப்பாளையம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
ஆம்புலன்ஸை தென்காசிக்கு கொண்டு செல்லக்கூடாது என்று கூறி ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மேலப்பாளையம் போலீசார் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸை தென்காசிக்கு மாற்றப்படுவது கைவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டதால் எல்லோரும் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications