கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் இந்தியாவே காரணம்- 'பெரியண்ணன்'!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தியர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுவதால் உணவுப் பற்றாக்குறையும், விலையேற்மும் அதிகரித்திருப்பதாக அபாண்டமாக கூறியுள்ள அமெரிக்கா, கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கும் இந்தியாவே காரணம் என மேலும் ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

இந்தியாவில் 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினர். ஒட்டுமொத்த அமெரிக்க மக்கள் தொகையைவிட இது அதிகமாகும். இந்த வர்க்கத்தினர் இப்போது அதிகம் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டதால் தரமான உணவை விரும்பிச் சாப்பிடுகின்றனர்.

இதனால் உலக அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. காரணம் இந்தியர்கள் என்று அமெரிக்க அதிபர் புஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கருத்து இந்தியர்களை எரிச்சலடைய வைத்தது.

பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் புஷ்ஷுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு வழக்கம் போல மெளனச் சாமியாராக உள்ளது.

இந்த நிலையில் இன்னொரு அபாண்டத்தை இந்தியா மீது அமெரிக்கா சுமத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியாவும், சீனாவும்தான் காரணம் என அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்காஸ் ஸ்டான்சல் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 120 அமெரிக்க டாலரை கடந்துள்ளது. உலகம் முழுவதும் எரிபொருள் தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவில் தேவை அதிகரித்து விட்டது. இதன் காரணமாகவே கச்சா எண்ணெய்யின் விலை உயர்ந்துள்ளது.

இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே வெளியிலிருந்து வரும் எரிபொருளை அதிகம் நம்பியிருக்காத நிலையை எடுக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது. இது அமெரிக்காவின் நலனுக்கு முக்கியமானது.

புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது. கடந்த 30 வருடங்களாக சுத்திகரிப்பு நிலையம் எதையும் அமெரிக்கா கட்டவில்லை.

புஷ் கருத்துக்கு சப்பைக்கட்டு:

நாடுகள் வளர்ச்சியடைவது நல்ல விஷயம்தான். இதனால் பெருமளவு மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்கிறது.

அதிபர் புஷ் கருத்தைப் பொறுத்தவரை இப்படித்தான் குறிப்பிட விரும்புகிறேன். மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக் கொள்ளும்போது அசைவ உணவுகளைப் பிரியப்பட்டு சாப்பிட நேரிடலாம். இதனால் உணவுக்காகப் பயன்படும் கால்நடைகளின் தேவை அதிகரித்து, அந்த கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களும் அதிகம் வேண்டியுள்ளது.

இந்த தீவனங்களில் சோளம், கோதுமை அல்லது இதுபோன்ற ஏதாவது பண்டங்கள் இருக்கலாம். இதனால்தான் விலைவாசி அதிகரித்துவிட்டது. எனவே உலக அளவில் உணவுப்பொருட்கள் விலையேற்றத்துக்கு இதுபோன்ற காரணங்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம் என்றார்.

பயோ எரிபொருள் உற்பத்திக்காக உணவுதானியங்களை அமெரிக்கா அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது பற்றிய கேள்விக்கு ஸ்காட் பதிலளிக்கையில், கடந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் உணவுப்பொருட்களின் விலை ஏறக்குறைய 43 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதில் நீங்கள் குறிப்பிடுவது போல பயோஎரிபொருள் தயாரிப்புக்கு உணவுதானியங்களை அதிகம் பயன்படுத்தியதால் இந்த விலையேற்றத்தில் அதன் பங்கு வெறும் 1.5 சதவீதம்தான்.

மற்றபடி விலையேற்றத்துக்கு முக்கிய காரணமான, பெரும் பங்கு வகிக்கின்ற, அதிகரித்துவரும் தேவை, இன்னும் உதாரணத்துக்கு வேண்டுமென்றால் நீங்களெல்லாம் (செய்தியாளர்கள்) சொல்வதுபோன்ற எரிசக்தி விலைஉயர்வு, ஆஸ்திரேலியாவில் தட்பவெட்ப மாற்றங்களால் விளைவுகள் அல்லது கிழக்கு ஐரோப்பாவில் கோதுமை உற்பத்தியில் பிரச்னை ஆகியவற்றால் உணவுப்பொருள்களின் விலைவாசி உயர்ந்திருக்கலாம்.

அன்னிய நாட்டு எரிபொருளை சார்ந்திருப்பதை ஈடுசெய்ய உள்நாட்டிலேயே பயோஎரிபொருளை உற்பத்தி செய்கிறோம். இதற்காக உணவு தானியங்களை பயன்படுத்துவதால் உணவுப்பொருள் விலையேற்றத்தில் அதன் பாதிப்பு தெரியத்தான் செய்கிறது. ஆனால் அதன் தாக்கம் மிகக்குறைவுதான் என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளார் ஸ்காட்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+