சேது: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
டெல்லி: ராமர் பாலம் இயற்கையாக உருவானதா என்பதை ஆராய, சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, தொல்பொருள் ஆய்வுத் துறை ஆய்வுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்க முடியுமா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை கூறியுள்ளது.
சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு இன்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இன்றைய வக்கீல்கள் வாதத்திற்குப் பின்னர் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் ரவீந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மத்திய அரசின் வக்கீல் பாலி நாரிமனிடம் சில கேள்விகளைக் கேட்டது.
ராமர் பாலத்தை பாரம்பரியச் சின்னமா என்பதை முடிவு செய்ய தொல்பொருள் ஆய்வுத் துறையின் ஆய்வை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த ஆய்வை மேற்கொள்ள முடியுமா என்பதை மத்திய அரசு பரிலீசிக்க வேண்டும்.
அதுவரையில் சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற முடியுமா, அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
பின்னர் வழக்கு விசாரணை ஜூலை 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.