கர்நாடகம் முதல் கட்ட பிரசாரம் இன்று ஓய்வு - களத்தில் 47 கிரிமினல்கள்
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில், முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான பிரசாரம் இன்றுடன் முடிகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் நிற்கும் வேட்பாளர்களில் 47 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
கர்நாடக சட்டசபையின் 224 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க மே 10, 16 மற்றும் 22 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இதில் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. முதல் கட்டமாக வருகிற 10ம் தேதி 89 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 2வது கட்ட தேர்தலில் 66 தொகுதிகளுக்கும், இறுதி கட்டமாக மே 22ம் தேதி 69 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறும்.
இதற்கிடையே, முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 47 பேர் கிரிமினல்கள் என தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் கண்காணிப்பு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய முக்கியக் கட்சிகளின் சார்பில் பல கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் திரிலோச்சன் சாஸ்திரி கூறுகையில், முக்கிய தேசிய கட்சிகளே கிரமினல்களை வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது மிகவும் கவலை தரும் அம்சமாகும் என்றார் அவர்.
பீகார், உ.பி, ம.பியை ஒப்பிடும்போது இது மிகவும் குறைச்சல் என்று ஆறுதல்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.