அடகுக்கடையில் ரூ.20 லட்சம் நகை கொள்ளை
சென்னை: சென்னை புறநகரில் அடகுக்கடை இரும்புப் பெட்டகத்தை தூக்கிச் சென்று அதிலிருந்த ரூ.20 லட்சம் நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் அருகே கோலப்பாக்கத்தில் அடகுக்கடை நடத்தி வருபவர் வினோத்குமார் ஜெயின். பூட்டியிருந்த அவரது கடையில் ஷட்டரை உடைத்து ஒரு கும்பல் இன்று உள்ளே புகுந்தது. அங்கிருந்த 650 கிலோ எடையுள்ள இரும்பு பாதுகாப்புப் பெட்டகத்தை அலேக்காக அந்த கும்பல் தூக்கிச் சென்றது.
கடையைவிட்டு 200 மீட்டர் தள்ளி மறைவான ஓரிடத்தில் வைத்து பெட்டகத்தை அந்த கொள்ளை கோஷ்டியினர் உடைத்தனர்.
அதிலிருந்த நகைகளையும் ரொக்கத்தையும் அள்ளிக்கொண்டு தப்பமுயன்றபோது அந்த வழியாக வந்தவர் பார்த்துவிட்டார். கொள்ளைக்காரர்களை பார்த்து அவர் கூச்சல் போட்டதால் கொள்ளையர்கள் அவரை கற்களை வீசி தாக்கினர்.
சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் உதவிக்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பியோடினர். இந்த துணிகர கொள்ளையால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து காஞ்சிபுரம் எஸ்பி பெரியய்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை பற்றி பெரியய்யா கூறுகையில், இவ்வளவு கனமான இரும்புப் பெட்டகத்தை தூக்கி வந்திருக்க வேண்டுமென்றால் அந்த கும்பலில் ஐந்து அல்லது ஆறு பேராவது இருந்த்திருக்க வேண்டும்.
கொள்ளையர்களை பிடிக்க ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
பெட்டகத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரூ.60,000 ரொக்கம் வைத்திருந்ததாக அடகுக்கடை உரிமையாளர் வினோத்குமார் ஜெயின் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல சென்னை குரோம்பேட்டையில் பட்டப்பகலில் ஒருகும்பல் அடகுக்கடை வியாபாரியை அடித்துக் கொன்று நகைகளை கொள்ளையடித்தது.
இதனால் சென்னை புறநகர் பகுதியில் மக்கள் பீதியடைந்துள்ளனர்.