கர்நாடகத்தில் 89 தொகுதிகளில் நாளை முதல் கட்ட தேர்தல்
பெங்களூர்: கர்நாடகத்தில் நாளை 89 தொகுதிகளில் முதல் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மிகத் தீவிரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளும் அடக்கம்.
காங்கிரஸ், பாஜக இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ள இந்தத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் தனது ஓட்டு வங்கியை தக்க வைக்க பெரும் முயற்சியில் இறங்கியுள்ளது.
அதிமுகவும் 7 இடங்களில் போட்டியிடுகிறது.
கட்-அவுட், பேனர், கொடி, தோரணங்கள் போன்றவற்றை பயன்படுத்த தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததால் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந் நிலையில் 89 தொகுதிகளிலும் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். முதல்கட்ட தேர்தலுக்கு 18,652 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொம்மனஹள்ளி, சிவாஜி நகர், பிடிஎம் லே அவுட் ஆகிய பெங்களூர் தொகுதிகள் பதற்றம் நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டு மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரும் 16ம் தேதி 2-வது கட்ட தேர்தலும், 22ம் தேதி 3-வது கட்ட தேர்தலும் நடக்கிறது. 25ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.