போலி மதுவுக்கு கடிவாளம்: கரூர் மது விற்பனை 'விர்'
கரூர்: போலி மது விற்பனைக்கு அதிகாரிகள் கடிவாளம் போட்டதால் கரூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் ஏப்ரல் மாதத்தில் ரூ 14.23 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆனது.
கரூர் மாவட்டத்தில் 112 டாஸ்மாக் மதுபான கடைகளும், பார்களும் செயல்பட்டு வருகின்றன.
தொழில் நகரமான கரூரில் டெக்ஸ்டைல்ஸ், சாயப்பட்டறை, பஸ் பாடி கட்டுதல், கொசு வலை தயாரித்தல் போன்ற பிரதான தொழில்கள் மற்றும் அதை சார்ந்த தொழில்களிலும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களில் பலர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர் என்பது வேதனை தரும் செய்தியாகும். வாராந்திர சம்பள நாளான சனிக்கிழமைதோறும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நிற்கக்கூட இடம் கிடைக்காமல் ஜனக்கூட்டம் நிரம்பி வழியும்.
கடந்த ஜனவரி மாதம் 39,000 மதுபான பெட்டிகள், 18,920 பீர் பெட்டிகள் விற்பனை மூலம் 13 கோடியே 41 லட்சத்து 27 ஆயிரத்து 82 ரூபாய் வருவாயை டாஸ்மாக் ஈட்டியது.
இந்த நிலையில் கரூரில் போலி மது விற்பனை கனஜோராக நடந்தது. கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்படும் மதுபாட்டில்களும் சக்கைபோடுபோட்டன. முன்னாள் ராணுவத்தினரிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி திருட்டுத்தனமாக சிலர் பார் நடத்திவந்தனர்.
இதனால் டாஸ்மாக் சரக்கு விற்பனையில் சுணக்கம் ஏற்பட்டதால் அதிகாரிகள் சுதாரித்தனர்.
இதையடுத்து கரூரில் மதுவிலக்கு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்ச ரூபாய் போலி மதுவை ஒரே நாளில் பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையை தொடர்ந்து கடைப்பிடித்தால் அரசுக்கு இன்னும் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications