153 மாணவருக்கு ஒரே ஆசிரியர்- அரசு பள்ளி அவலம்
கரூர்: கரூர் அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 153 மாணவர்களுக்கு ஒரே தலைமை ஆசிரியர் பாடம் நடத்தும் அவலம் நிலவுகிறது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் மாவட்ட ஆசிரியர் பள்ளிக்கான மாதிரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ளது.
இந்த பள்ளியில் இருந்து கடந்த 2002ம் ஆண்டில் ஆரம்ப்பள்ளி தனியாக பிரிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக அயல்பணி (டெபுடேஷன்) முறையில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் இந்த பள்ளியில் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 2006ம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் பணி மாறுதலில் சென்ற பிறகு வேறு ஆசிரியர்கள் இந்த பணியிடத்தை நிரப்பவில்லை. புதிய ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை.
தற்போது பள்ளியில் 153 மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இவர்களை தலைமை ஆசிரியர் ஒருவர் மட்டுமே கவனித்து வருகிறார். மேலும் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் இப்பள்ளி சேர்க்கப்படாமல் தனிமுறையில் பின்பற்றப்படுகிறது. இதனால் கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், குழந்தைகளின் கல்வித் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் வைத்துள்ளது. இந்த அவல நிலையை போக்க வேண்டும் என்று அக்கிராம மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.