டுவென்டி20 லீக் நடத்த ஆஸி. கிரிக்கெட் வாரியம் திட்டம்
மெல்போர்ன்: இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திவரும் ஐபிஎல் டுவென்டி20 லீக் மூலம் லாபம் கொழிப்பதை அறிந்து கொண்டு இந்த போட்டிகளை நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் ஆசை வந்துவிட்டது.
இங்கிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக உள்நாட்டு அணிகளுக்காக சர்வதேச வீரர்கள் கலந்து கொள்ளும் லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் அவை 3 நாள் போட்டிகளாகும். இப்போதும் அங்கு லீக் போட்டிகள் நடந்து வருகின்றன என்றாலும் அதற்கு மவுசு குறைந்துவிட்டது. முதன்முதலில் சர்வதேச ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை பந்தயத்தையும் இங்கிலாந்து அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் மக்கள் ஆர்வம் குறைந்து ஒருநாள் போட்டிகளை விரும்பி ரசிக்கத் தொடங்கினர்.
எதையும் உடனடியாக தெரிந்து கொள்ளவேண்டும் என விரும்புவதுதானே மனித இயல்பு.இதுதான் தற்போதைய டுவென்டி20க்கும் அடிப்படையாகும்.
ஆஸ்திரேலியாவில் நடந்த டுவென்டி20 உலகக்கோப்பைக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் முந்திக்கொண்டு ஐபிஎல் லீக் போட்டிகளை ஆரம்பித்தது.
இந்த போட்டிகளின் மூலம் விளம்பரம், ஒளிபரப்பு உரிமைகள் என பல்வேறு வகையிலும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை இந்திய கிரிக்கெட் வாரியம் அள்ளியது.
இதைப் பார்த்து சப்புக்கொட்டத் தொடங்கிய இங்கிலாந்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் தாங்களும் டுவென்டி20 லீக் போட்டி தொடங்குவது பற்றி முடிவு செய்தன. அதற்கான வழிமுறைகள் பற்றி திட்டமிட்டு வருகின்றன.
இந்த வரிசையில் லேட்டஸ்டாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் சேர்ந்துவிட்டது.
இது குறித்து அந்த வாரியத்தின் செய்தி தொடர்பாளர் பீட்டர் யங் கூறுகையில், உள்நாட்டு டுவென்டி20 கிரிக்கெட் போட்டிகளை கடந்த மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடத்திவருகிறோம். இந்த போட்டிகளில் மாநில வீரர்கள் மட்டும் விளையாடி வருகின்றனர்.
போட்டிகள் தொடர்பான விளம்பரம் மற்றும் டிவி ஒளிபரப்பு உரிமை வருமானம் குறைவாக உள்ளது. ஐபிஎல் அமைப்பின் டுவென்டி20 லீக் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து வருவதால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு புதிய டுவென்டி20 போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்த லீக் போட்டியை நியூசிலாந்துடன் இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் நிர்வாகத்தை பின்பற்றி உள்நாட்டு அணி, சர்வதேச வீரர்களின் ஊதியம், நட்சத்திர வீரர்களை தேர்வு செய்வது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.