சரப்ஜித் தண்டனையை குறைக்க பாக். உள்துறை எதிர்ப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியர் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை குறைக்க அந்நாட்டு உள்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி செய்வதால் சதிச் செயல்களை ஊக்கப்படுத்துவது போலாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாக கூறி கைது செய்யப்பட்ட இந்தியர் சரப்ஜித்சிங்குக்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. ஏப்ரல் 1ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
இந்திய அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் சரப்ஜித்தின் தூக்கு தண்டனை மே முதல் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் பிரதமர் கிலானியின் தலையீட்டால் மறுதேதி குறிப்பிடப்படாமல் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. அவரது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று இந்திய அரசும், சரப்ஜித்தின் குடும்பத்தினரும் பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக அதிபர் முஷாரப், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட அமைச்சகங்களுக்கு பிரதமர் கிலானி பரிந்துரைத்தார். தண்டனையை குறைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் ஜபீர் அப்பாஸி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் வெளியுறவு, சட்டம், உள்துறை, மனித உரிமை ஆணையம் ஆகிய துறைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக வெளியான செய்தியில், சரப்ஜித்தின் தண்டனையை குறைப்பதற்கு உள்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்ற தண்டனை குறைப்பு பாகிஸ்தான் சித்தாந்தத்துக்கு எதிரானது. இது சதி செயல்களை ஊக்கப்படுத்துவதாக அமைந்துவிடும்.
அப்படியே சரப்ஜித்துக்கு மன்னிப்பு வழங்கப்பட்டாலும் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க முடியாது.
ஏனெனில் குற்றவாளிகளை பரிமாறி கொள்ளும் ஒப்பந்தம் பாகிஸ்தான்-இந்தியா செய்து கொள்ளவில்லை. சரப்ஜித்தை விடுவிக்க வேண்டும் என்றால் அவ்வாறான ஒப்பந்தம் அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூட்டத்தில், இந்த விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுநர்களின் அறிக்கையை 24 மணிநேரத்துக்குள் தருமாறு சட்ட அமைச்க்கத்திடம் கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையை பிரதமர் மற்றும் அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications