ஜெயலலிதா மீது பூங்கோதை பாய்ச்சல்
சென்னை: எனது ராஜினாமா குறித்து கருத்து சொல்ல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு அருகதை இல்லை என்று சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டையும் தமிழனத்தையும் பாதுகாக்கும் ஒரே தலைவர் முதல்வர் கருணாநிதிதான். என் தந்தை ஆலடி அருணா இருந்தாலும், இல்லாவிட்டாலும், நான் பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்னுடைய நிரந்தர தலைவர் கருணாநிதிதான்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிமுக பொது செயலர் ஜெயலலிதா அவருடைய அரசியல் ஆதாயத்துக்காக மறைந்த என் தந்தையை பற்றி கூறுவது அரசியல் நாகரீகமாகாது.
என் தந்தை அவருடைய மரணத்துக்கு முன்பு தன் தலைவர் கருணாநிதியை விட்டு பிரிந்து வாடியதும் வருத்தம் அடைந்ததும், மீண்டும் அவருடனும் திமுகவுடனும் இணைந்து கொள்ள விரும்பியதும் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும்தான் அந்த உண்மையும் வலியும் புரியும்.
எல்லா தருணங்களிலும் என்றென்றும் திமுகவின் தலைவரும் முதல்வருமான கருணாநிதியின் தலைமையின் கீழ், அவரது வழிகாட்டுதலின்படி பணிபுரிவதையை நான் பெருமையாக கருதுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய அவருக்கு என்னால் சிறு அளவில் கூட எவ்வித சங்கடமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் ராஜிநாமா கடிதத்தை அளித்தேன். என் தலைவருக்காக திமுகவின் கடைசி தொண்டராக இருந்து பணியாற்றுவதையே பெருமையாக கருதுபவள் நான்.
எனவே இந்த விஷயம் குறித்து கருத்து சொல்ல ஜெயலலிதாவுக்கு எந்தவித யோக்கியதையோ அருகதையோ இல்லை. ஜெயலலிதா மீது எத்தனை வழக்குகள் போடப்பட்டன என்பது நாட்டுக்கே தெரியும் என்று பூங்கோதை கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications