For Daily Alerts
Just In
கருணாநிதியுடன் பிரதமர் பேச்சு - குணமடைய வாழ்த்து
முதல்வர் கருணாநிதி முதுகு மற்றும் கழுத்து வலி காரணமாக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வரின் உடல் நலம் குறித்து அவரது மகளும், திமுக எம்.பியுமான கனிமொழியிடம், தொலைபேசி மூலம் நேற்று விசாரித்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
அதேபோல பிரதமர் மன்மோகன் சிங்கும் நேற்று முதல்வரைத் தொடர்பு கொண்டு பேசினார். விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்று அப்போது வாழ்த்தினார். மேலும், கருணாநிதிக்கு பூங்கொத்தும் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலாவும் முதல்வர் கருணாநிதியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். அவரும் கருணாநிதிக்கு பூங்கொத்து அனுப்பி வைத்தார்.
மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் நேற்று மருத்துவமனைக்குச் சென்று முதல்வரைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
மாறன் சகோதரர்கள் சந்திப்பு:
இதற்கிடையே, மதுரை தினகரன் அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து முதல்வருடன் பேசாமல் இருந்து வந்த சன் டிவி அதிபர் கலாநிதி மாறனும், அவரது தம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனும் நேற்று முதல்வரை தனித் தனியாக சந்தித்து நலம் விசாரித்தனர்.
காலையில் முதல்வரைச் சந்தித்தார் கலாநிதி மாறன். மாலையில் தயாநிதி மாறன் கருணாநிதியை சந்தித்தார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு இருவரும் தங்களது தாத்தாவைச் சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், முதல்வரின் மகன் மு.க.அழகிரி, காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, வன்னிய பேரவை தலைவர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோரும் முதல்வரை நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.
முதல்வர் கருணாநிதியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும், இன்னும் ஓரிரு தினங்களில் அவர் குணமடைவார் என்றும், அவருக்குப் பிசியோதெரபி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் ெதரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Sunday, May 18, 2008, 11:52 [IST]