கொடைக்கானல் மலையில் குதித்து திருச்சி காதல் ஜோடி தற்கொலை
கொடைக்கானல்: திருச்சியைச் சேர்ந்த காதல் ஜோடி, கொடைக்கானல் மலையிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டது.
கொடைக்கானல் டாக்சி டிரைவராக இருப்பவர் ரவி. நேற்று ஒரு காதல் ஜோடி இவரது காரில் கொடைக்கானலை சுற்றிப் பார்த்தது. பின்னர் பசுமைப் பள்ளத்தாக்குப் பகுதிக்கு அவர்கள் சென்றனர்.
அங்கு டிரைவர் ரவியிடம், காதல் ஜோடி இரு பார்சல்களைக் கொடுத்தது. இவற்றை எப்படியாவது கூரியரில் அனுப்புமாறு கூறி விட்டு கீழே இறங்கி பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றனர். டிரைவரும் அதை காருக்குள் வைத்தார்.
அப்போது திடும் என சத்தம் கேட்டது. இதைக் கேட்டு பதறிய டிரைவர் என்ன என்று பார்த்தபோது அந்தக் காதல் ஜோடி மேலிருந்து பள்ளத்தாக்கில் குதித்தது தெரிய வந்தது.
மேலிருந்து பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். அதிர்ச்சி அடைந்த ரவி உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து அந்தக் காதல் ஜோடி கொடுத்த பார்சல்களைக் கைப்பற்றினர். அதில் ஒரு பார்சலில் ஜெயமோகன் (வயது 32), தகப்பனார் பெயர் சோமசுந்தரம், திருச்சி -8 என்ற முகவரியும், இன்னொரு பார்சலில் ரீனா பானு (வயது 30), சவுந்தரபாண்டியன் பிள்ளை தெரு, திருச்சி என்ற முகவரியும் இருந்தது. மேலும் இரு பார்சல்களிலும் தொலைபேசி எண்களும் இருந்தன.
இதையடுத்து அந்தப் பார்சல்களைப் பிரிக்காமல் அதில் இருந்த தொலைபேசி எண்களைப் போலீஸார் தொடர்பு கொண்டு இரு குடும்பத்தினரிடமும் விவரத்தைத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் உடனடியாக செல்வமோகனின் குடும்பத்தினர் கொடைக்கானல் விரைந்தனர். இந்த சமயத்தில் இருள் சூழ்ந்ததால் உடல்களை மீட்கும் பணியை போலீஸாரால் மேற்கொள்ள முடியவில்லை. இன்று காலை இருவரது உடல்களையும் மீட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு கொடைக்கானல் சீசனில் நடந்துள்ள முதல் தற்கொலைச் சம்பவம் இது என்பதால் கொடைக்கானல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications