ஓகேனக்கல்: சுமுக தீர்வுக்கு முயற்சிப்பேன்-வெங்கையா
சென்னை: கர்நாடகத்தில் பாஜக அரசுடன் பேசி ஓகேனக்கல் பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண முயற்சிப்பேன் என அக் கட்சியின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடு கூறினார்.
செனனை வந்த நாயுடு விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
பாஜக என்றால் வடநாட்டு கட்சி, மதவாத கட்சி, வகுப்புவாத கட்சி என்று முத்திரை குத்தி, பொய் பிரசாரம் மூலம் எங்களது வளர்ச்சியை காங்கிரஸ் போன்ற கட்சிகள் தடுத்து வந்தன. ஆனால் அவைகள் எல்லாம் இன்று முறியடிக்கப்பட்டு விட்டன.
கடந்த 30 ஆண்டு காலமாக கடுமையாக உழைத்து, தற்போது தென்னிந்தியாவில், கர்நாடக மாநிலத்தில் முதல் வெற்றியை பெற்று உள்ளோம். இது எங்களது கடுமையான உழைப்புக்கு கிடைத்த பலன்.
பாஜக 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 5 சுயேச்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக கவர்னரிடம் 115 எம். எல்.ஏக்களின் பட்டியலை அளித்து விட்டோம்.
ஆனால் கவர்னர் அதை வாங்கி வைத்துக் கொண்டு, எங்களை ஆட்சி அமைக்க அழைக்காமல் ஏனோ தயக்கம் காட்டி வருகிறார். அதுமட்டுமின்றி ஒரு நாள் காலதாமதம் செய்து விட்டார்.
இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் கட்சிதான். அது புறவாசல் வழியாக புகுந்து ஆட்சியை பிடிக்க சதி செய்து வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த சதிச் செயல் பலிக்காது.
கடந்த 2004ம் ஆண்டு முதல் 20 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் 12 மாநிலங்களில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். காங்கிரஸ் கட்சிக்கு தோல்விமுகம் தொடங்கி விட்டது.
கர்நாடக மாநில தேர்தல் முடிவு வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடி ஆகும். கர்நாடக மாநிலத்தைப்போல் தென்னிந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க முயற்சிப்போம்.
ஓகேனக்கல் பிரச்சினையை பொறுத்தவரை அது ஒன்றும் தீர்க்க முடியாத பிரச்சினை அல்ல. இந்த பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள பாஜகவினர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகவும், கர்நாடகத்தில் உள்ள பாஜகவினர் அந்த மாநிலத்துக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றனர்.
கர்நாடகத்தில் புதிய ஆட்சி அமைந்த பின்னர் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனைக்கு சுமுகத் தீர்வு காண முயற்சிப்பேன். காவிரி பிரச்சனையில் பல ஆண்டுகளாக இழுத்தடிப்பது போல ஓகேனக்கல் பிரச்சனையிலும் தீர்வு காண முடியாது என்று சொல்வதை ஏற்க முடியாது என்றார் நாயுடு.
துரைமுருகன்:
இந் நிலையில் கடலூரில் நிருபர்களிடம் பேசிய பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன்,
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை. நிறுத்த வேண்டிய அவசியமும் இல்லை. பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தத் திட்டத்துக்கு எதியூரப்பா இடையூறாக இருக்கமாட்டார் என்று நம்புகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications