ஆழியாறு: தமிழக-கேரளா திருவனந்தபுரம் பேச்சு தோல்வி
சென்னை: தமிழக-கேரளா மாநிலங்களிடையிலான பரம்பிக்குளம்- ஆழியாறு நதி நீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து திருவனந்தபுரத்தில் இன்று உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் மீண்டும் கூடி பேச்சு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் பாசனத்துக்காக பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப் பாசனத் திட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தமிழகத்தில் இருந்து உருவாகும் ஆனமலையாறு, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு ஆகிய 4 ஆறுகள் கேரளா வழியாக ஓடி, கடலில் கலக்கின்றன.
இந்த ஆறுகளின் நீரை பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் 1958ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த ஆறுகளில் இருந்து தமிழகம் 30.5 டி.எம்.சி. நீரையும், கேரளா 20 டி.எம்.சி. நீரையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனமலையாறை திசை திருப்புவது உட்பட 10க்கும் மேற்பட்ட விவகாரங்களில் தமிழகம்- கேரளா இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.
மேலும் பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிக்கவும் தமிழகம் மற்றும் கேரளா அரசுகள் முடிவு செய்துள்ளன.
இது தொடர்பாக இன்று திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, பொதுப்பணித் துறை செயலாளர் ஆதிசேஷையா, மின்சார வாரியத் தலைவர் மச்சேந்திரநாதன், காவிரி தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மோகன்தாஸ் உள்ளிட்ட தமிழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவர்கள் கேரளா தலைமைச் செயலாளர் மற்றும் பல்வேறு துறை செயலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறும் என தமிழக தலைமை செயலர் திரிபாதி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications