பெங்களூரில் ஸ்டாலி்ன்-சென்னையில் பரபரப்பு!

இரு நாட்களாக அவரை சென்னையில் காண முடியாத திமுகவினர் இடையே ஸ்டாலின் எங்கே என்று கேள்வி எழுந்தது. அவர் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால், அவரது குடும்பத்தினர் மட்டுமே லண்டன் சென்றதும், ஸ்டாலின் போகவில்லை என்றும் தெரியவந்தது.
இந் நிலையில் ஸ்டாலின் பெங்களூரில் ஓய்வில் இருப்பது தெரியவந்துள்ளது. புதன்கிழமையே பெங்களூர் வந்துவிட்ட அவர் அங்கு கனகபுரா சாலையில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த பண்ணை வீடு ஸ்டாலின் சகோதரி செல்வியின் கணவர் முரசொலி செல்வத்துக்கு சொந்தமானதாகும்.
செல்வம் தான் கர்நாடகத்தில் கலாநிதி-தயாநிதியின் உதயா டிவியை கவனித்து வருகிறார்.
பெங்களூரில் இருந்து அப்படியே ஸ்டாலின் லண்டன் செல்லக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி, அழகிரிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி, கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட வேண்டும் என குடும்பத்தாரிடம் இருந்து முதல்வருக்கு நெருக்குதல் தரப்பட்டு வருவதாக கடந்த சில வாரங்களாக வார இதழ்களில் செய்திகள் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் வரும் 3ம் தேதி முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந் நிலையில் ஸ்டாலின் திடீரென சென்னையை விட்டுக் கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications