கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு கருணாநிதி கோரிக்கை

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரத்தில், பொதுமக்கள் தொலைக்காட்சிப் பயன்பாட்டுக்கு கேபிள் இணைப்பை வழங்குவதற்கு ஏற்ற வகையில், தமிழக அரசு நிறுவனமான அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள.
அதையொட்டி வரும் ஜூலை 15-ந் தேதி முதல், கேபிள் இணைப்பு வழங்கும் பணியை தொடங்கி, படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தி, செப்டம்பர் மாத இறுதிக்குள் அந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைவதற்கு ஏற்ற வகையில், அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் அனைத்து ஏற்பாடுகளையும் விரைவுபடுத்திட வேண்டுமென்று முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் கேபிள் இணைப்பை வழங்குவதற்குத் தக்கபடி, தஞ்சை, கோவை, நெல்லை மற்றும் வேலூரில் தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு, வெளிப்படையான ஒளிவுமறைவற்ற டெண்டர் முறையைப் பின்பற்றி கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, அதை நிறுவுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் கேபிள் இணைப்பு வழங்குவதற்கு தேவையான உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் 15.6.08 அன்று தனியே கோரப்பட உள்ளது.
அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுடன் சேர்ந்து, பொது மக்களுக்கு கேபிள் இணைப்பை வழங்கும் பணியை மேற்கொள்வதற்கு, மாநிலம் முழுவதும் ஏற்கனவே செயல்பட்டு வரும் கேபிள் ஆப்பரேட்டர்கள், வரும் ஜூன் 9-ந் தேதிக்குள் தங்களது விருப்பத்தை அறிவிக்கக் கோரி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள் ஏற்கனவே முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்து உறுதி அளித்தபடி, அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுடன் சேர்ந்து, பொது மக்களுக்கு கேபிள் இணைப்பை வழங்கும் பணியை முழுமையாகவும், வெற்றிகரமாகவும் நிறைவேற்றிடத் தேவையான ஒத்துழைப்பை வழங்கிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications