லஞ்சம்-கஸ்டம்ஸ் அதிகாரி கைது: சமையல் அறையில் ரூ. 28 லட்சம்
சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களின் மதிப்பை, லஞ்சம் வாங்கிக் கொண்டு, குறைத்துக் காட்டி வரி விதிப்பதில் சலுகை காட்டிய சென்னை கஸ்டம்ஸ் அதிகாரியை சி.பி.ஐ கைது செய்தது.
அவரது வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியபோது படுக்கையறை, சமையல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 28 லட்சம் ரொக்கம், ரூ. 30 லட்சம் மதிப்பிலான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை ராஜாஜி சாலையில் சுங்க வரித் துறை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் வேணுகோபால் (43). வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை மதிப்பீடு செய்து வரி விதிக்கும் அதிகாரி இவர்.
இந் நிலையில் ஒரு தனியார் நிறுவனம் கொரியாவில் இருந்து பழைய மெஷின்களை இறக்குமதி செய்தது. இந்த எந்திரங்களை ஆய்வு செய்த வேணுகோபால் அவை அனைத்தும் புதிய மெஷின்கள் போல் தெரிகிறது. அதனால், புதிய மெஷின்களுக்கான மதிப்பில் தான் வரி போடுவேன் என்றார்.
பழைய மெஷின்களாக் கணக்கிட்டு குறைந்த வரி போட வேண்டும் என்றால் எனக்கு ரூ. 25,000 தர வேண்டும் என்றார்.
ஆனால், இதை இறக்குமதி செய்தவர்கள், அவை பழையவை என்பதற்கான சான்றிதழ்களைக் காட்டியும் வேணுகோபால் கேட்கவில்லை. லஞ்சத்திலேயே குறியாக இருந்தார்.
இதையடுத்து சி.பி.ஐயிடம் அந்த நிறுவனம் புகார் தந்தது. சிபிஐயின் லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.பி. முருகன் விசாரணையில் இறங்கினார். வேணுகோபாலை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்த சிபிஐ அவரிடம் பணத்தைத் தருமாறு கூறினர்.
இதையடுத்து அந்த நிறுவனத்தினர் ரூ.15,000த்தை முன் பணமாகக் கொடுத்தனர். அதை வேணுகோபால் வாங்கியபோது சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும் களவுமாகப் பிடித்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டே பல்லாவரத்தில் உள்ள அவரது வீட்டிலும் திடீர் சோதனை நடத்தினர். அப்போது படுக்கையறை மற்றும் சமையல் அறையிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். அதில் ரூ. 28 லட்சம் இருந்தது.
மேலும் ரூ. 30 லட்சம் மதிப்பிலான சொத்து பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. வேணுகோபால் கைது செய்யப்பட்டு்ள்ளார்.












Click it and Unblock the Notifications