உக்ரைனில் போர் கப்பல்களை குவிக்கும் ரஷ்யா
மாஸ்கோ: உக்ரைனின் கருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள தனது கடற்படைப் பிரிவில் இடம் பெற்றுள்ள போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை 100 ஆக அதிகரிக்கவுள்ளது ரஷ்யா. இதனால் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே புதிய மோதல் உருவாகும் சூழல் எழுந்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய கடற்படைத் தளபதி விலாடிமிர் வியசோட்ஸ்கி கூறுகையில், உக்ரைனின் சிரிமியா பகுதியில் உள்ள ரஷ்யாவின் கருங்கடல் பிரிவின் போர்க்கப்பல்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரிக்கப்படும்.
தற்போது இப்பிரிவில் 35 கப்பல்கள் உள்ளன. தற்போது கூடுதல் போர்க்கப்பல்கள் சேர்க்கப்படுவதன் மூலம் இப்பிரிவின் பலம் அதிகரிக்கும்.
மேலும் இப்பிரிவில் இடம் பெறும் வீரர்களின் எண்ணிக்கையும் 25 ஆயிரமாக அதிகரிக்கப்படும். தற்போது 11 ஆயிரம் வீரர்கள் இப்பிரிவில் இடம் பெற்றுள்ளனர்.
தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்ைக எடுக்கப்படுகிறது. கருங்கடல் படைப் பிரிவு எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் வகையில் ஆயத்த நிலையில் இருக்கும் என்றார் அவர்.
கருங்கடல் பிரிவில் நிலை கொண்டுள்ள ரஷ்ய கடற்படைப் பிரிவில் பல்வேறு போர்க் கப்பல்கள் இடம் பெற்றுள்ளன. 1997ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்த படைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தம் 2017ம் ஆண்டு மே 28ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட மாட்டாது என உக்ரைன் அதிபர் விக்டர் யுசெசென்கோ ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சிறு சிறு உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் மாஸ்கோ மேயர் யூரி லுஸ்கோவை, உக்ரைனுக்குள் நுழைய அனுமதிக்க அந்த நாடு மறுத்து விட்டது.
முன்னாள் சோவியத் யூனியன் நாடான உக்ரைன், நேட்டோ அமைப்பில் உறுப்பினராக முயற்சித்து வருகிறது என்பது நினைவிருக்கலாம். இது ரஷ்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், கருங்கடல் படைப் பிரிவை ரஷ்யா பல மடங்கு அதிகரிக்க முடிவு செய்திருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications