பெண்ணை காரிலிருந்து தள்ளிவிட்டு தப்பிய கும்பல்
தென்காசி: தென்காசியில் இளம் பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு மர்ம கும்பல் தப்பியோடியது.
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை முன்பு நேற்று மதியம் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவரை காரிலிருந்து கீழே தள்ளிவிட்டு ஒரு கும்பல் தப்பியது.
அவர் கைலி, ஆண்கள் அணியும் சட்டை அணிந்திருந்தார். காரிலிருந்து தள்ளப்பட்டு ரோட்டில் கிடந்த அந்த பெண்ணை அப்பகுதியிலுள்ளவர்கள் உடனடியாக மருத்துமனையில் சேர்த்தனர்.
ஆனால், அந்தப் பெண் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் தகராறு செய்துள்ளார். அங்கு பணியில் இருந்த ஒரு மனநல மருத்துவர் மற்றும் ஊழியர்கள் துணையோடு அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்தனர்.
அவரிடம் விசாரித்தபோது, தனது பெயர் பிரியா என்றும், சொந்த ஊர் மேட்டுபாளையம் அருகேயுள்ள பேரப்பட்டி கன்னிமுனிகோவில் என்றும் தந்தை பெயர் தங்கவேலு, தாயார் சகுந்தலா என்றும் கூறியுள்ளார்.
தாய் சிறு வயதிலேயே தந்தையைப் பிரிந்து விட்டதால் அப்பா 2வது திருமணம் செய்து கொண்டதாகவும், சித்தியின் கொடுமையால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.
மருத்துவ கல்லூரியில் படித்து வருவதாக கூறும் அவர், தன்னை ரமேஷ் என்பவர் அம்பாசமுத்திரத்திற்கு அழைத்து வந்து குடிக்க ஏதோ கொடுத்ததாகவும், இதையடுத்து தான் மயங்கி விட்டதாகவும், அவருடன் 5 பேர் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
மயங்கிய பின் என்ன நடந்தது என்று என்னால் எதுவும் கூற முடியவில்லை. என்னை கொல்வதற்காக காரில் இருந்து தள்ளிவிட்டு சென்று விட்டனர் என்றும் அவர் கூறினார்.
அப் பெண்ணுக்கு மருத்துமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து தென்காசி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கூறியவை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications