திருச்சி-சென்னை சேவை தொடங்கும் பாரமவுண்ட் ஏர்வேஸ்
திருச்சி: திருச்சி - சென்னை - திருச்சி மார்க்கத்தில், புதிதாக இரு தினசரி விமான சேவைகளை தொடங்கவிருப்பதாக பாரமவுண்ட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூலை மாதம் 2வது வாரத்திலிருந்து இந்த புதிய விமான சேவை அமலுக்கு வருகிறது. தினசரி இரு முறை இந்த விமான சேவை மேற்கொள்ளப்படும் என பாரமவுண்ட் நிறுவன நிர்வாக இயக்குநர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திருச்சி விமான நிலையத்தில் பாரமவுண்ட் நிறுவனத்தின் அலுவலகம் தொடங்கப்படும். தொடக்கத்தில், 70 சீட்கள் கொண்ட ஜெட் எம்பிரேயர் ரக விமானம் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
திருச்சி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளதால், திருச்சி விமான நிலையம், பெருமளவில் லாபம் தரும் விமான மையமாக திகழ்கிறது. மேலும் இங்கு ஐடி பூங்காவும் அமைக்கப்படவுள்ளதால், திருச்சி நகரின் தொழில் முக்கியத்துவம் மேலும் கூடியுள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விமான சேவை காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும்.
பாரமவுண்ட் நிறுவனத்திடம் 5 விமானங்கள் இருக்கிறது. தற்போது எட்டு பிரிவுகளில் 42 தினசரி சேவைகளை அது மேற்கொண்டு வருகிறது. ஜூலை மாதம் மேலும் 2 விமானங்கள் சேரவுள்ளன. 2010ம் ஆண்டுக்குள் 40 விமானங்களைக் கொண்டதாக இது விரிவுபடுத்தப்படும்.
திருச்சிக்கும், திருவனந்தபுரம், கொச்சிக்கு இடையே புதிய சேவையைத் தொடங்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
2011ம் ஆண்டு முதல் சர்வதேச விமான சேவையை தொடங்கவும் பாரமவுண்ட் திட்டமிட்டுள்ளது என்றார் தியாகராஜன்.