அதிமுக எம்எல்ஏவுக்கு துப்பாக்கி உரிமம்-நீதிமன்றம் உத்தரவு
சென்னை: அதிமுக எம்.எல்.ஏ வி.பி. கலைராஜனுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தி.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் துப்பாக்கி உரிமம் கோரி சென்னை போலீஸில், கடந்த 2006ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இந்த விண்ணப்பம் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிராகரிக்கப்பட்டது.
அவர் மீது 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக கலைராஜன் மீது தொடரப்பட்ட வழக்குகள் இவை. சட்ட விரோதமாக கூடியது, அடக்குமுறையை கையாண்டது, அரசு அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுத்தது ஆகிய 3 கிரிமினல் வழக்குகள் கலைராஜன் மீது தொடரப்பட்டன.
இந்த நிலையில் தனக்கு துப்பாக்கி உரிமம் மறுக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், கலைராஜன் ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், தஞ்சாவூரில் உள்ள எனது பெற்றோர் வசிக்கும் இல்லத்தை
திமுகவினர் தாக்கி சூறையாடினர். எனது தந்தையையும் தாக்கி விட்டனர்.
எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவேதான் எனது சுய பாதுகாப்புக்காக ரிவால்வர் வைத்துக் கொள்ள அனுமதி கோரி காவல்துறையிடம் விண்ணப்பித்தேன் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், எந்தவிதக் காரணமும் இல்லாமல், மனுதாரரின் விண்ணப்பத்தை காவல்துறை நிராகரித்திருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
வி.பி.கலைராஜன் விண்ணப்பத்தை சென்னை போலீஸ் ஆணையர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும். மனுதாரர் மீது 3 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பதைத் தவிர வேறு எந்தப் புகாரும் இல்லை.
ஒருவர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது என்று கூற முடியாது.
இந்த விஷயத்தில், ஆயுதச் சட்டம் 14வது பிரிவை பூர்த்தி செய்வதாக காவல்துறை ஆணையரின் நடவடிக்ைககள் இல்லை.
கிரிமினல் வழக்கில் ஒருவர் தண்டிக்கப்பட்டிருந்தால் மட்டுமே, அவருக்கு துப்பாக்கி உரிமம் தர மறுக்கலாம் அல்லது உரிமத்தை ரத்து அல்லது சஸ்பெண்ட் செய்யலாம்.
மனுதாரர் துப்பாக்கி உரிமம் கோரி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். அதை காவல்துறை ஆணையர் நான்கு வாரத்திற்குள் பரிசீலனை செய்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications