கேரளா, மே.வ., திரிபுராவில் இன்று பந்த்-தமிழக வாகனங்கள் நிறுத்தம்
திருவனந்தபுரம்&கொல்கத்தா: இடதுசாரி கட்சிகள் ஆளும் மாநிலங்களான கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகியவற்றில், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து இன்று பந்த் தொடங்கி நடந்து வருகிறது. கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து எந்த வாகனமும் செல்லவில்லை.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வுக்கு இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இன்று முதல் ஒரு வாரத்திற்குப் போராட்டம் நடத்தப் போவதாக அவை அறிவித்துள்ளன.
கடையடைப்பு, வேலைநிறுத்தம், சாலை மறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு அவை அழைப்பு விடுத்துள்ளன.
இந்த நிலையில், இடதுசாரிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களான கேரளா, மேற்கு வங்கம், திரிபுரா ஆகியவற்றில் இன்று பந்த் நடத்தப்படுகிறது.
இன்று அதிகாலையிலேயே இந்த மாநிலங்களில் பந்த் தொடங்கியது. பந்த்தையடுத்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் ஓடவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கேரளாவில் பந்த் முழு அளவில் நடந்து வருகிறது. வாகனப் போக்குவரத்து அடியோடு முடங்கிக் கிடக்கிறது. பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை.
தமிழகத்திலிருந்தும் எந்த வாகனமும் கேரளாவுக்குப் போகவில்லை. இரு மாநில எல்லைப் பகுதிகளான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலும், கோவை மாவட்டம் வாலையாரிலும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பந்த் முடிந்த பின்னர்தான் வாகனங்கள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications