சென்னையில் ரவுடிகள் வேட்டை - 1,322 பேர் கைது
சென்னை: சென்னையில் கொலைகள் தொடர் கதையாகி வரும் நிலையில் மீண்டும் ரவுடிகள், பழைய குற்றவாளிகளைப் பிடிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் மாநகர கால்துறை ஆணையர் சேகர் பேசுகையில், குற்றத் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னையில் கடந்த 3 நாட்களாக போலீசார் நடத்திய அதிரடி சோதனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1, 322 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 71 பேர் ரவுடிகள், 94 பேர் பழையக்குற்றவாளிகள், 7 பேர் நீதி மன்ற பிடி வாரண்ட் நிலுவையில் உள்ளவர்கள், 1, 017 பேர் கெட்ட நடத்தை உடையவர்கள்.
குடிபோதையில் வாகனம் ஓட்டிய 89 பேர், ஹெல்மெட் அணியாத 1,400 பேர் அதிக வேகமாக வாகனங்களை ஓட்டிய 250 பேர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அண்மையில் சந்திரகாந்தன் என்ற டாக்டரிடம் நுங்கம்பாக்கம் ரெயில்வே ஸ்டேஷன் பின்புறம் கொள்ளையடித்த சுரேஷ், பிரான்சிஸ், அருண்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மற்றொரு வழக்கில் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக நாடக மாடிய வியாசர் பாடியைச் சேர்ந்த முரளி மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ. 1 லட்சத்து 53 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது.
சென்னையில் விபத்துக்களை தடுக்கவும், வாகன நெரிசலை போக்கவும் போக்குவரத்து போலீசார் திறமையாக செயல்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக விபத்துக்கள் குறைந்துள்ளன. போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களிடம் இந்த ஆண்டு இதுவரை ரூ. 4.50 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 23 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
கோல்டு குவெஸ்ட் தங்கக் காசு மோசடி வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கிண்டியில் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்றார் சேகர்.












Click it and Unblock the Notifications