தஞ்சை வாலிபர் உடல்-பிரதமருக்கு வைகோ கடிதம்
சென்னை: சிங்கப்பூர் சிறையில் மர்மமான முறையில் இறந்த தஞ்சை வாலிபரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சி்ங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில்,
சிங்கப்பூருக்கு 1997ஆம் ஆண்டு வேலைக்கு சென்ற தஞ்சை மாவட்டம் நெம்மேலி வடக்கு கிராமத்தை சேர்ந்த காட்டுராஜா என்பவர் சிறையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் இறந்துள்ளார். அவரது தந்தையின் வேண்டுக்கோளுக்கிணங்க காட்டுராஜாவின் மரணம் குறித்த செய்தியை தங்களின் உடனடி கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
காட்டுராஜா கடந்த 1997ம் ஆண்டு ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம் சிங்கப்பூருக்கு வேலை தேடிச் சென்றார். அவரது உண்மையான தமிழக முகவரியை அங்கு பதிவு செய்து இவ்வளவு காலமாக அங்கு தங்கியுள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் கடந்த 22ம் தேதி அன்று அவர் மர்மமான முறையில் சிறையில் இறந்துள்ளார். காட்டுராஜாவின் உறவினர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, காட்டுராஜா கடந்த 22ம் தேதி இறந்ததை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால், அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்ப அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், இறந்தவரின் குடும்பத்தினர் துயரத்தில் தவிக்கின்றனர்.
சிங்கப்பூர் சிறையில் இறந்த தமிழக வாலிபர் காட்டுராஜாவின் உடலை உடனடியாக அவரது சொந்த ஊருக்கு, அனுப்புவதற்காக நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
காங். தோல்வி நிச்சயம்:
இதற்கிடையே சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த மதிமுக பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பேசிய வைகோ,
மதிமுக தனி மரமாக தன் கையால் தானே நின்று வளர்ந்த கட்சி. கடந்த 15 ஆண்டுகளாக பல இன்னல்களுக்கு மத்தியில் வீறு நடை போட்டு வருகிறது. கட்சியின் 15வது மாநாடு வருகிற 18ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.
இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனுப்பியுள்ள சிறப்பு வாழ்த்து செய்தியில், மதிமுகவின் ஒவ்வொரு சொல்லும், செயலும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடின்மையால் விலைவாசி கட்டுக் கடங்காமல் எங்கோ சென்று விட்டது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணிக்கு தோல்வி நிச்சயம் என்றார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், காரைக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அறிகிறேன்.
தூத்துக்குடியில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலை தொடர்பாக நான் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. காரைக்குடியிலும் இந்த ஆலை வந்தால் அதை தடுக்க முயற்சி செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications