சென்னையில் சாதாரண பெட்ரோல் திடீர் நிறுத்தம்-மக்கள் பெரும் அவதி!

சென்னை: சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் சாதாரண பெட்ரோல் விற்பனை திடீரென முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. விலை அதிகமான ப்ரீமியம் மற்றும் எக்ஸ்ட்ரா ப்ரீமியம் பெட்ரோல் மட்டுமே விற்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும், அவதியும் அடைந்துள்ளனர்.
சமீபத்தில் பெட்ரோல், டீசல், காஸ் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் குமுறலுடன் உள்ள நிலையில், தற்போது சென்னை போன்ற பெருநகர வாசிகளுக்கு புதிய அதிர்ச்சி
வந்துள்ளது.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விற்பனை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ப்ரீமியம், எக்ஸ்ட்ரா ப்ரீமியம் ஆகிய விலை அதிகமான பெட்ரோல், டீசலே விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் சாதாரண பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.54 ஆகும். ஆனால் ப்ரீமியம், எக்ஸ்ட்ரா ப்ரீமியம் வகை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 59 ஆகும். அதேபோல சாதாரண டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 34 ஆகும். அதுவே ப்ரீமியம் டீசல் என்றால் லிட்டருக்கு ரூ. 39 வரை விலை வருகிறது.
திடீரென சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர். இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களிடம் கேட்டபோது, எங்களுக்கு என்ன எரிபொருள் அனுப்பப்படுகிறதோ, அதைத்தான் நாங்கள் விற்கிறோம்.
சென்னை முழுவதும் சாதாரண பெட்ரோல், டீசல் சப்ளையை, இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட எண்ணை நிறுவனங்கள் நிறுத்தி விட்டன. சென்னை மட்டுமல்ல, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களிலும் இதே நிலைதான் என்கின்றனர்.
அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலான விலை கொண்ட ப்ரீமியம், எக்ஸ்ட்ரா ப்ரீமியம் பெட்ரோல், டீசல் விற்பனையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.












Click it and Unblock the Notifications