இலங்கை கடற்படை முகாம் மீது கடற்புலிகள் தாக்குதல்-7 பேர் பலி

வட மேற்கில் உள்ள மன்னார் கடல் பகுதியில், இலங்கை கடற்படை முகாம் மீது இன்று அதிகாலை கடல் புலிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சில மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 4 கடல் புலிகளும், 3 கடற்படையினரும் கொல்லப்பட்டனர். கடற்படை வசம் இருந்த ரேடார் சாதனம், ஆயுதங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அப்பகுதி தற்போது தங்களது வசம் வந்து விட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் கடல் புலி பிரிவின் தலைவர் ஸ்ரீராமனும் அடக்கம் என இலங்கை பாதுகாப்புத் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கடற்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எருக்கலம்பிட்டி என்ற இடத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதிகாலை 2.15 மணியளவில் 6 படகுகளில் வந்து கடற் புலிகள் அதிரடித் தாக்குதலை மேற்கொண்டனர்.
கடற்படையினருக்கு ஆதரவாக விமானப் படையும் தாக்குதலில் ஈடுபட்டது. விமானத் தாக்குதலைத் தொடர்ந்து கடற் புலிகள் தங்களது படகுகளோடு வெட்டித்தலைத்தீவு பகுதிக்கு தப்பி ஓடி விட்டதாகவும் பாதுகாப்புத் துறை தகவல் தெரிவிக்கிறது.
இந்தத் தாக்குதலில் கடற்படையின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது என்றும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications