முஷாரப்புக்கும் பூட்டோ கதிதான்: ஷெரீப் எச்சரிக்கை
இஸ்லாமாபாத்: பூட்டோவுக்கு ஏற்பட்ட கதிதான் அதிபர் முஷாரப்புக்கும் நேரும் என்று பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றம் அருகே, வக்கீல்கள், முஸ்லீம் லீக் கட்சியினர் உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாபெரும் கூட்டத்தை நடத்தினர். இதில் ஷெரீப் சிறப்புரையாற்றினார். அப்போது முஷாரப்புக்கு அவர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
அப்போது ஷெரீப் பேசுகையில், முஷாரப்பே கவனியுங்கள். பொதுத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்க வேண்டும் என நாங்கள் உங்களுக்குக் கூறினோம். அதிபர் பதவியிலிருந்து உடனடியாக வெளியேறி விடுங்கள். மரியாதையாக போய் விடுங்கள் என்றோம். ஆனால் நீங்கள் அதற்கு செவி மடுககவில்லை.
கடந்த எட்டரை ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்கு நீங்கள் இப்போது மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும். அரசியல்வாதிகளை (சுல்பிகர் அலி புட்டோ) மட்டும்தான் தூக்கில் போட வேண்டுமா? (அப்போது கூட்டத்தினர் முஷாரப்பையும் தூக்கில் போட வேண்டும் என்று குரல் எழுப்பினர்).
கடந்த எட்டரை ஆண்டு காலத்தில் நீங்கள் செய்த தவறுக்கு பதவியிலிருந்து வெளியேற்றுவதோடு நிற்க மக்கள் தயாராக இல்லை. அதற்குரிய தண்டனையையும் நீங்கள் அனுபவிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். நீங்கள் பாதுகாப்பாக தப்ப அனுமதிக்க முடியாது என்றார் ஷெரீப்.
நேற்று மாலை முதலே இந்தக் கூட்டம் நடந்தது. ஆனால் ஷெரீப் உள்ளிட்டோர் இன்று காலைதான் பேசினர். இக்கூட்டத்தில் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், உச்சநீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் அய்ஸாஸ் அசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.