பெண்களுக்கும் அர்ச்சகராகும் உரிமை-திமுக மாநாட்டில் தீர்மானம்
கடலூர்: கோவில்களில் அர்ச்சகராகும் உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும், வெளியூர்களில் தனியே தங்கி பணிபுரி்து வரும் பெண்களுக்கு தமிழக அரசு வீட்டு வசதித்துறை மூலமாக தங்கும் விடுதிகளை கட்டித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் திமுக மகளிரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
கடலூரில் நடந்த இந்த மாநாட்டில் பங்கேற்றதுடன் முக்கியமான தலைப்பில் உரையும் ஆற்றினார் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி. இதன்மூலம் அவரும் நேரடி அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
மாநாட்டில் வள்ளுவரும் வாய்மையும் என்ற தலைப்பில் கயல்விழி பேசியதாவது:
திருக்குறளின் இன்னொரு பெயரே பொய்யாமொழிதான். இந்த பாதை நல்ல பாதைதான் என்று வழிகாட்டுபவர் வள்ளுவர்.
ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே வாய்மை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தில் அமைதி கெடும்.
நீதி, நேர்மை இருந்தால் அதற்கு பேர்தான் நடுநிலை. தமிழகம், இந்தியாவின் சரித்திரத்தை 'நெஞ்சுக்கு நீதி' என்று முதல்வர் கருணாநிதி எழுதினார். அவர் வள்ளுவரின் உள்ளத்தை புரிந்தவர், வாழும் வள்ளுவர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் பாபர் மசூதியை இடிக்க அனுமதிக்க மாட்டோம். இது தான் வாய்மையின் குரல்.
நீதிக்கட்சி என்பதுதான் நமது கட்சியின் (திமுக) முந்தைய பெயர்.
கட்சி நடத்துவது எப்படி என்பதற்கு இலக்கண புத்தகம் கலைஞர். 1969ம் ஆண்டு பொங்கலுக்கு அடுத்த நாள் திருவள்ளுவர் நாள் என்பதை அறிவித்தார்.
1972ம் ஆண்டு வள்ளுவர் கோட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். 2000ல் திருவள்ளுவருக்கு 133 அடி உயரத்தில் சிலை அமைத்தார். தற்போது அமைய உள்ள புதிய சட்டசபை கட்டிடத்தின் மேற்கூரை வள்ளுவர் கோட்டத்தின் மேற்கூரை போன்று அமையவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
வாழ்வில் வாய்மை இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். வாழும் வள்ளுவராம் கலைஞருடன் யாரையும் ஒப்பிடவும் முடியாது.
கழக பூந்தோட்டத்தில் பிறந்ததால் உங்கள் முன் என்னையும் பேச வைத்துள்ளனர். கழகத்தின் வித்து பெரியார். அவரது இயற்பெயர் ஈ.வே.ராமசாமி. அவருக்கு பெரியார் என்று பெயர் சூட்டியது 1938ம் ஆண்டு சென்னை பெண்கள் மாநாட்டில்தான்.
இந்த பெயர் சூட்ட மீனாம்பாள் சிவராஜ் என்ற அம்மையார் தீர்மானம் நிறைவேற்றினார். வான்மழையில் முளைவிட்ட சிறு பயிராகிய என்னை இங்கு பேச அனுமதித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கயல்விழி.
தனது மகளின் பேச்சை அழகிரி ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.
தீர்மானங்கள்:
மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான தீர்மானங்கள் விவரம்:
எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மகளிர் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்களின் சுமையை குறைக்கும் வகையில் எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு இம்மாநாடு வலியுறுத்துகிறது. (இந்தக் கோரிக்கையை தமிழக அரசே ஏற்பதாக அறிவித்த கருணாநிதி சிலிண்டெர் விலையை ரூ. 30 குறைப்பதாக அறிவித்தார்)
சேது சமுத்திர திட்டம்:
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றிட நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
77 திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான இலக்கிய, பண்பாட்டு வளம் நிறைந்த செம்மொழியான தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும்.
தனியார் நிறுவனங்களில், இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்துவதற்குரிய வழிவகையை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
பெண்களுக்கும் அர்ச்சராகும் உரிமை:
மகளிருக்கும் அர்ச்சகராகும் உரிமை வழங்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத தொகுதிகளை ஒதுக்கீடு செய்யும் சட்ட மசோதைவை உடனே நிறைவேற்ற வேண்டும். அதில் உள் ஒதுக்கீடு குறித்து பின்னர் பேசி முடிவெடுக்கலாம் என மத்திய அரசையும், அரசியல் கட்சிகளையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
சுயமரியாதை திருமண முறை ஏற்கப்படுவதற்கு உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தங்கும் இடம் இன்றி தவிக்கும் அரவாணிகளுக்கு குடியிருப்புக்களை அமைத்துத் தர வேண்டும்.
பணியாற்றும் பெண்களுக்கு தங்கும் விடுதி:
பணிபுரியும் பெண்களுக்கு தமிழக அரசு வீட்டு வசதித்துறையின் மூலமாக தங்கும் விடுதிகளை கட்டித் தரவேண்டும்.
பெண்கள் சுயஉதவி குழுக்கள் வளர்ச்சிக்கு அயராது பாடுபடும் உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications