தூத்துக்குடியில் ஈராக் போர் கழிவுகள்!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரு தனியார் குடோனில் ஈராக் போரில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான ராக்கெட் லாஞ்சர்கள், கன்னிவெடிகள் ஆகியவற்றின் கழிவுகள் கைப்பற்றப்பட்டன.
தூத்துக்குடி எட்டையபுரம் ரோட்டிலுள்ள தனியார் குடோனில் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சன்னி தேவசகாயம் தலைமையிலான போலீசார், சுங்க இலாக அதிகாரிகள், மத்திய உளவுதுறை அதிகாரிகள் ஆகியோர் இன்று சோதனை நடத்தினர்.
இதில் அங்கு துருப்பிடித்த வெடிகுண்டு, ராக்கெட் லாஞ்சர், பசூக்கா ஆகியவற்றின் உறைகளும், பிஸ்டல் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் போன்றவற்றின் காலித் தோட்டாக்களுமாக 300 கிலோ எடையிலான ஆயுதக் கழிவுகள் இருந்தன.
இதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், ஆயுதங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் சென்னை நிறுவனம் ஒன்று துபாயிலிருந்து இவற்றை இறக்குமதி செய்திருப்பது தெரிய வந்தது.
சென்னை நிறுவனத்திடமிருந்து தூத்துக்குடி நிறுவனம் ஒன்று இந்த ஆயுதக் கழிவுகளைப் பெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இறக்குமதிக்கான ஆவணங்கள் மிகத் தெளிவாக இருந்ததால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
இவை அனைத்தும் ஈராக் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் கழிவுகளாக இருக்ககூடும். இவற்றை துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து இங்குள்ள சிலர் வாங்கியுள்ளனர். ஆனால் இவை அனைத்துமே கழிவுகள் என்பதால் ஆபத்து எதுவும் கிடையாது.