நீதிக்கு புறம்பாக நடக்க மாட்டோம்: கருணாநிதி
தஞ்சாவூர்: நாங்கள் நீதிக்கு புறம்பாக நாங்கள் நடைபோட மாட்டோம். நீதிக்கு சிறு காயம் ஏற்பட்டாலும், நீதியை காப்பாற்றுகின்ற வகையில், நீதிபதிகளுக்கு, நீதிமன்றங்களுக்கு துணையிருப்போம் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தின் 200வது ஆண்டு விழா தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கரிகாற்சோழன் அரங்கில் நடந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் நீதிமன்றத்தின் 200வது ஆண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் 200வது ஆண்டு நினைவு வளைவை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது:
கே.ஜி.பாலகிருஷ்ணன் இன்றைக்கு உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதியாக வீற்றிருப்பது நாமெல்லாம் மகிழத்தக்க ஒன்று. நாமெல்லாம் உணர்ந்து பாராட்டத்தக்க ஒன்று. நம்மிலே ஒருவர் ஏன், நாமே அந்த உருவத்திலே அங்கே அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு உணர்வை நமக்கெல்லாம் ஏற்படுத்துகின்ற நிலையாகும்.
அவருடைய காலத்திலேதான் இந்தியாவை எதிர்காலத்திலே இருளடைந்து விடுமோ என்று ஏக்கத்தோடு பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த நமக்கெல்லாம் ஆறுதலாக 27 சதவிகிதம் இடஒதுக்கீட்டில் வெற்றியினை நாம் பெற முடிந்தது என்றால் தலைமுறை தலைமுறைக்கும் ஏன், இந்திய நாட்டு வரலாற்றில், தமிழ்நாட்டு வரலாற்றில், சமூகநீதி வரலாற்றில் இடம்பெறத்தக்க ஒரு தீர்ப்பு, அந்த தீர்ப்பை அவர்கள் நமக்கு வழங்கி இருக்கின்றார்கள்.
நமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பல்ல, சமுதாயத்திற்கு, ஏழை எளியோருக்கு, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, அடங்கி கிடந்த மக்களுக்கு 'எழு விழி' என்கிற உற்சாகத்தைத் தரக்கூடியதின் மூலமாக அந்த தீர்ப்புக்கு மூலகர்த்தாவாக விளங்குகின்ற நம்முடைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை இந்த நீதிமன்றத்தின் 200வது ஆண்டு விழாவில் அந்த விழா சார்பாக நான் வாழ்த்துகின்றேன். நன்றி கூறுகின்றேன்.
இந்த கால தமிழர்கள் சார்பாக மாத்திரமல்ல, எதிர்கால தமிழர்கள் சார்பாகவும் என்னுடைய பேரன், பேத்திகளின் சார்பாகவும் நான் அவரை வாழ்த்த கடமைப்பட்டிருக்கின்றேன். ஏனென்றால் ஒரு சமுதாய மாற்றத்துக்காக சமுதாய விழிப்புக்காக நடைபெற்றிருக்கின்ற ஒரு பெரிய காரியம் அது.
அந்த காரியத்தில், தான் யார் என்பதை எத்தகைய நீதியை நிலைநாட்டுவார் என்பதை, விளக்கிய பெருமைக்குரியவர் அவர்.
நீதிபதிகளை குறிப்பாக நீதிமன்றங்களை தமிழக அரசு நல்ல முறையிலே உற்சாகப்படுத்துகிறது என்பதை அவர்கள் நேற்று கோடிட்டு காட்டி நீதிமன்றங்களுக்கு கட்டிடங்கள் கட்டிக் கொடுப்பது மாத்திரம் நீதியை காப்பாற்றியது ஆகாது. நேர்மையான நீதியும் அங்கே வழங்கப்பட வேண்டும் என்று ஒரு வாக்கியத்தை அவர் சொல்லியிருக்கிறார்.
அதை 'இந்து' பத்திரிகையிலே படித்துப் பார்த்தேன். கட்டிடங்களை மாத்திரமல்ல; அந்த கட்டிடத்துக்குள்ளே இருந்து வெளி வருகின்ற தீர்ப்புகள் எந்த அளவிற்கு நீதியின் சாயலுடையதாக, நீதியை காப்பாற்றுவதாக, நீதியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் அவர் எடுத்துச் சொல்லியிருக்கின்றார்.
எங்களுடைய திமுக ஆட்சியே 50, 60 ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் சென்றால் நீதிக்கட்சியின் ஆட்சிதான். நீதிக்கட்சியாக தொடங்கியதுதான் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகமாக பரிணமித்திருக்கிறது என்பதை அவர்களுக்கு நான் நினைவுபடுத்துகின்றேன்.
நீதிக்கட்சியாக இருந்த இந்த இயக்கத்தை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் திராவிட இயக்கமாக மாற்றிய பெருமையை சேர்த்தார்கள்.
எனவே நீதிக்கு புறம்பாக நாங்கள் நடைபோட மாட்டோம். நீதிக்கு சிறு காயம் ஏற்பட்டாலும் அதற்கு ஆறுதல் கூறுகின்ற வகையில் நீதியை காப்பாற்றுகின்ற வகையில், நீதியைப் பாதுகாக்கின்ற வகையில் நீதிபதிகளுக்கு, நீதிமன்றங்களுக்கு எப்படி நாங்கள் துணையிருக்க வேண்டுமோ அப்படி துணையிருப்போம் என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்றார் கருணாநிதி.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்குலி விழா மலரை வெளியிட முதல் பிரதியை அட்வகேட் ஜெனரல் மாசிலாமணி பெற்றுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications