முல்லைப் பெரியாறு: துரைமுருகன் விளக்கம்
சென்னை: முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மை குறித்து கேரள அரசின் அச்சம் தேவையற்றது, என்று பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
பொதுப்பணித்துறையின் 150வது ஆண்டு விழாவையொட்டி, கோட்டூர்புரம் அடையாறு ஆற்றங்கரையில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க திட்டமிட்டு, நீர்வள ஆதாரத் துறை மூலம் மரம் நடும் விழா நேற்று நடைபெற்றது.
பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை மாநகர மேயர் சுப்ரமணியன் ஆகியோர் மரக் கன்றுகளை நட்டனர்.
விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
பொதுப்பணித் துறையின் 150வது ஆண்டு வரலாற்றுச் சின்னமாக இருக்க வேண்டும் என, இங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவந்தனர். அவர்களுக்கு வேறு இடத்தில் வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு, ஐந்து ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, 50 லட்சம் ரூபாய் செலவில் நிரந்தரமான பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு ஐ.ஐ.டி. நிறுவனத்தைக் கொண்டு ஆய்வு செய்து, முல்லைப் பெரியாறு அணை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து, கேரள அரசின் அச்சம் தேவையற்றது. ஏற்கனவே மத்திய நீர்வளக் குழுவினர் பல முறை ஆய்வு செய்து, முல்லைப் பெரியாறு அணையில் 136 அடி முதல் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என தெரிவித்து, மத்திய அரசு மூலம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டும் திருப்தி அடைந்தது.
ஆனால், கேரள அரசு மறுபடியும் இரண்டு முறை ரிவிஷன் பெட்டிஷன் போட்டது. அதற்கும் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்த உத்தரவை உறுதி செய்தது. இந்நிலையில் கேரள அரசு ஐ.ஐ.டி. நிறுவனத்தை கொண்டு ஆய்வு செய்து, வெளியிடப்பட்டுள்ள திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது என்றார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications