ரயில்களில் 'பயோ-டாய்லெட்': வேலு தகவல்
திருச்சி: ரயில்களில் பயோ டாய்லெட் வசதி செய்யப்படவுள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கூறியுள்ளார்.
திருச்சி வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரயில்களில் தண்ணீர் மூலம் கழிவுகளை வெளியேற்றும் வகையில் கழிப்பிடங்களை மாற்றி நவீனப்படுத்தும் வகையில், "பயோ- டாய்லெட்' ராஜ்தானி, சதாப்தி உட்பட ஆறு ரயில்களில் அமைக்கப்பட்டு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
அந்த கழிப்பிடங்கள் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. எனவே, அனைத்து ரயில் பெட்டிகளிலும், "பயோ-டாய்லெட்' வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த நான்கைந்து ஆண்டில் ரூ.நான்காயிரம் கோடி மதிப்பில், நாட்டிலுள்ள 34 ஆயிரம் ரயில் பெட்டிகளில், "பயோ-டாய்லெட்' அமைக்கப்படும்.
இப்பணிகள் பொன்மலை மத்திய ரயில்வே பணிமனை, ஐ.சி.எப்., உள்ளிட்ட பணிமனைகளில் செய்யப்படும்.அனைத்து ரயில்களிலும் விரைவில், "ஏர் பிரேக்' அமைக்கப்படும்.
இதுவரை நாட்டில் 25 சதவீத வழித்தடம் மின் மயமாக்கப்பட்டுள்ளது. 11வது ஐந்தாண்டு திட்டப்படி நடப்பாண்டில் இரண்டாயிரத்து 500 கி.மீ., பாதை மின்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுரை-தூத்துக்குடி, மணியாச்சி- நாகர்கோவில் இடையே 262 கி.மீ., ரயில்பாதை ரூ.156 கோடி மதிப்பில் மின்மயமாக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம்-திண்டுக்கல் இடையே 272 கி.மீ., ரயில் தடத்தை ரூ.822 கோடி மதிப்பில் இரு வழிப்பாதையாக்கும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் துவக்கப்படவுள்ளது.
தெற்கு ரயில்வேயில் மொத்தம் 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு வைத்திருப்போம். அதனால், எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என்றார் வேலு.