7ம் தேதி இடதுசாரிகள் ஆதரவு வாபஸ்!!

மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து முடிவெடுக்க இடதுசாரிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது.
இதில் சிபிஎம், சிபிஐ, பார்வர்ட் பிளாக், புரட்சிகர சோசலிஷ கட்சி ஆகிய கட்சிகளி்ன் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தான் மத்திய அரசுக்கு '7ம் தேதி கெடு' விதிக்கப்பட்டது.
ஜி-8 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் வரும் 7ம் தேதி தான் டோக்கியோ புறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் புஷ்சுடன் ஒப்பந்தம் குறித்து பிரதமர் பேச்சு நடத்தவுள்ளார். அதே போல இக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சர்வதேச அணு சக்திக் கழகத்தின் (IAEA) தலைவர் முகம்மத் அல் பாரடாயையும் சந்திக்கவுள்ளார்.
இந்தச் சந்திப்புகள் நடந்தால், அணு ஒப்பந்தம் கிட்டத்தட்ட இறுதி வடிவம் பெற்றுவிடும். இதைத் தடுக்க இடதுசாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனால் ஜி-8 மாநாட்டுக்கே செல்லக் கூடாது, சர்வதேச அணு சக்திக் கழகத் தலைவரும் பேச்சு நடத்தக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஏற்கனவே கூறிவிட்டது. அவர் ஜப்பான் கிளம்பினால் உடனே ஆதரவு வாபஸ் பெறப்படும் என மார்க்சிஸ்ட் பொலிட்பீரோவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந் நிலையில் இன்று இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் முடிவடைந்த பின் நிருபர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் பிரகாஷ் காரத்,
அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்ய வசதியாக IAEAவுடன் பேச்சு நடத்தப் போகிறீர்களா, அவர்கள் சொல்லும் பாதுகாப்பு நடவடிக்கைகளை (safeguards agreement) மேற்கொள்ளப் போகிறீர்களா என்பது குறித்து 7ம் தேதிக்குள் அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கெடு விதித்தார்.
மத்திய அரசு இதற்கு ஆமாம் என்று பதில் தந்தால் இடதுசாரிகளின் ஆதரவு வாபஸ் ஆகும். பதிலே சொல்லாமல் பிரதமர் ஜப்பானுக்கு புறப்பட்டாலும் ஆதரவு வாபசாகும்.
புஷ்ஷை சந்திப்பேன்.. அல் பாரடாயை சந்திக்க மாட்டேன், அப்படியே சந்தித்தாலும் safeguard பற்றியெல்லாம் விவாதிக்க மாட்டேன் என்று பிரதமர் விளக்கம் தந்தால் ஒரு வேளை இடதுசாரிகள் தங்கள் நிலையிலிருந்து இறங்கி வரலாம்.
அதற்குள் முலாயமின் ஆதரவு கிடைத்துவிட்டால், இடதுசாரிகளுக்கு பதிலடி அறிக்கை தந்துவிட்டு ஜப்பானுக்கு பிரதமர் நிம்மதியாக பிளேன் ஏறலாம்.
இடதுசாரிகள் விளக்க பிரச்சாரம்:
முன்னதாக செய்தியாளர்களிடம் பிரகாஷ் காரத் மேலும் கூறுகையில்,
ஜூலை14ம் தேதி முதல் நாடு தழுவிய அளவில், அணு சக்தி ஒப்பந்தத்தை இடதுசாரிகள் எதிர்ப்பதற்கான காரணம் என்ன என்பதை விளக்கும் பிரசாரம் தொடங்குகிறது.
மேலும், பண வீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றில் அரசின் கையலாகாத தனத்தை விளக்கும் பிரசாரமும் கூடவே மேற்கொள்ளப்படும்.
மேலும், பாஜக தலைமையிலான மதவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் நாங்கள் பிரசாரத்தின்போது வலியுறுத்துவோம்.
இன்றைய கூட்டத்தில் இது தொடர்பாக இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ன என்றார் காரத்.











Click it and Unblock the Notifications