கொடநாடு வர முடியாது.. போயஸ்கார்டன் தான்..
சென்னை: ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பாக அவரை சந்திக்க வேண்டிய அதிகாரி கொட நாட்டில் சந்தித்துப் பேச மறுத்துவிட்டார். போயஸ் கார்டனில் சந்திக்க முடியும் எனக் கூறிவிட்டார்.
இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஜெயலலிதா.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில்,
ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பாக அவரை எஸ்.பி அந்தஸ்துக்கு குறையாத தமிழக காவல்துறை அதிகாரி ஒருவர் 2 வாரத்துக்குள் அவரை வீட்டில் சந்தித்துப் பேச வேண்டும் என உத்தரவிட்டார்.
இந் நிலையில் ஜெயலலிதாவின் சார்பில் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான 6 வழக்கறிஞர்கள் நீதிபதி ஜெயச்சந்திரனை நீதிமன்றத்தில் சந்துத்து ஒரு புகார் அளித்தனர். அதி்ல்,
ஜெயலலிதா தற்போது கொடநாடு எஸ்டேட்டில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி போலீஸ் அதிகாரி 2 வார காலத்திற்குள் ஜெயலலிதாவை சந்தித்திருக்க வேண்டும். ஆனால், இதை தமிழக அரசு அரசியலாக்கி வருகிறது.
ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்மெண்ட் கேட்டு காவல்துறையின் ஸ்பெஷல் பிராஞ் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியான துரைகுமார் கடந்த 28ம் தேதி ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து தன்னை கொட நாடு எஸ்டேட்டில் ஜூலை 2ம் தேதி மாலை 4 மணிக்கு வந்து சந்திக்குமாறு அவருக்கு ஜெயலலிதா கடந்த 30ம் தேதி பதில் அனுப்பினார்.
ஆனால், தன்னால் கொடநாடு எல்லாம் வர முடியாது. போயஸ் கார்டனில் தான் சந்திப்பேன் என்று கூறி விட்டார்.
இதற்கிடையே நீதிமன்றம் வழங்கிய 2 வார கால அவகாசம் முடிந்து விட்டது. கொடநாட்டில் இருந்து ஜெயலலிதா சென்னை வர மேலும் தாமதமாகும்.
எனவே அந்த அதிகாரியை உடனே கொடநாடு சென்று ஜெயலலிதாவை சந்திக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இதையடுத்து இந்த வழக்கை வரும் 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். அன்றைய தினம் அரசின் தலைமை வழக்கறிஞர் இதற்கு பதில் மனு தாக்கல் செய்யவுள்ளார்.












Click it and Unblock the Notifications