பள்ளிக்கு பூட்டு போட்டு ஆசிரியர்களை வெளியேற்றிய கிராம மக்கள்!
மதுரை: மதுரை மேலூர் அருகே தரம் உயர்த்தப்படாத அரசு தொடக்கப்பள்ளிக்கு பூட்டுப் போட்டு, ஆசிரியர்களையும் வெளியேற்றினர் கிராம மக்கள்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப் பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு உள்ள மாணவர்கள் 6-ம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் மேலூர் செல்ல வேண்டும். ஆனால் இந்த பள்ளியானது இந்த ஆண்டு முதல் நடு நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
உடனே பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் தொடக் கப்பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம் நம்பள்ளி நடுநிலைபள்ளியாகி விட்டது. இனிமேல் உங்களது குழந்தைகளை இங்கேயே படிக்க வைக்கலாம் என்று கூறி உள்ளனர்.
இதனை நம்பி பெற்றோர் தங்களது குழந்தைகளை 6-ம் வகுப்புக்கு மேலூருக்கு அனுப்பாமல் தங்களது கிராமத்திலேயே படிக்க வைக்கலாம் என்று எண்ணி இருந்தனர். ஆனால் இதுநாள்வரை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதற்கான அரசு உத்தரவு வரவில்லை.
இன்று காலை பள்ளிக்கு வந்த ஆசிரியர், ஆசிரியைகள் அரசு உத்தரவு இன்னும் வரவில்லை. எனவே உங்களது குழந்தை களை 6-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்றால் மேலூர் பள்ளியில் சேருங்கள். அதற்காக பள்ளி சான்றிதழ்களையும் வாங்கி செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனை கேள்விப்பட்டதும் கிராம மக்கள் ஆவேசம் அடைந்தனர்.
இவ்வளவு நாள் அமைதியாக இருந்து விட்டு இனிவேறு பள்ளிக்கு போங்கள் என்றால் எப்படி போக முடியும்.எந்த பள்ளிக்கூடத்தில் சேர்ப்பார்கள் என்று ஆத்திரம் அடைந்தனர். உடனே அங்கு உள்ள ஆசிரியர், ஆசிரியைகளை வெளியேற்றி பள்ளிக்கு கிராம மக்களே பூட்டு போட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, தாசில்தார் நீலாராம் ஆகியோர் விரைந்து சென்று சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
கட்டாய வசூல்-பள்ளிக்கு மாணவர்கள் பூட்டு:
இதற்கிடையே, அரசு பள்ளியில் மாணவர்களிடம் கட்டாய பணம் வசூல் செய்த ஆசிரியர்களை உள்ளே வைத்து பள்ளிக்கு மாணவர்களே பூட்டு போட்ட வினோதம் கரூரில் நடைபெற்றது.
கரூர் நகராட்சி அலுவலகம் எதிரில் நகராட்சி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் சுமார் 900 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் குடிநீர் வசதி, கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டி கடந்த சில வருடங்களாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.
மேலும், தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும், பள்ளியில் கட்டாய நன்கொடை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், காரணம் இன்றி மாணவர்களிடம் பணம் வசூலிக்க கூடாது என்றும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், பள்ளியில் பயிலும் மாணவர்கள் கரூரில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்கப்படும் துணியை மட்டுமே அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்று சில ஆசிரியர்கள் வற்புறுத்தி ஒவ்வொரு மாணவர்களிடம் ரூ 300 பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் முறையிட்டுள்ளனர். இதற்கு பள்ளி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சில மாணவர்கள் ஒன்று திரண்டு பள்ளி நடைபெறும் சமயத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை உள்ளே வைத்து பள்ளி கேட்டை இழுத்து பூட்டினர்.
தகவல் அறிந்த கரூர் நகர போலீசார் விரைந்து சென்று பள்ளிக்கு பூட்டு போட்ட பிளஸ் டூ பயிலும் மாணவர்கள் ஜெயராமன் உள்பட முன்று மாணவர்களை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதை கேள்விப்பட்ட 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் காவல் நிலையம் முன்பு முற்றுக்கையிட்டனர்.
இதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் குமாரசாமி காவல் நிலையம் சென்று ஜெயராமன் உள்பட முன்று மாணவர்களையும் அழைத்து வந்தார்.
இதனால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications