பெரும்பான்மையை நிரூபிப்போம்: சோனியா
டெல்லி: லோக்சபாவில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம். எங்களது குறிக்கோளை நிறைவேற்றுவோம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
நம்பிக்கை வாக்கு கோருவது குறித்து விவாதிக்க பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்தில் இன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் சிபு சோரன், ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட நான்கு கட்சிகளின் தலைவர்கள் மட்டும் வெவ்வேறு காரணங்களுக்காக கலந்துகொள்ளவில்லை. மற்றஅனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், இதுவரை ஆதரவு அளித்து வந்த இடதுசாரி கட்சிகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அணு சக்தி ஒப்பந்தத்தில் இணைந்து செயல்பட முடியாமல் போனது வருத்தம் தருகிறது.
லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வெற்றி பெறும். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களது குறிக்கோளை நிறைவேற்றுவோம்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு தந்துள்ள சமாஜ்வாடி கட்சிக்கும் நன்றிகள் என்றார்.
பின்னர் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், ராம் விலாஸ் பாஸ்வான் லண்டனில் உள்ளார். சிபு சோரன் மகனுக்கு கல்யாணம். எனவே இவர்கள் உள்பட நான்கு பேர் மட்டும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்திற்கு சோனியா காந்தி தலைமை தாங்கினார். லாலு பிரசாத் யாதவ், சரத் பவார் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது கருத்தைத் தெரிவித்தனர். அனைவரும் இடதுசாரிகளின் கூட்டணியை முறித்துக் கொண்டதை ஆமோதித்தனர்.
இப்போதைய நிலை தர்மசங்கடமானதுதான். இருந்தாலும் இதை சந்திக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்ல அனைவரும் தயாராக வேண்டும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இன்று இரவு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அப்போது நம்பிக்கை வாக்கு கோரும் தேதி இறுதி செய்யப்பட்டு குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்கப்படும் என்றார் பிரணாப் முகர்ஜி.
'டங் ஸ்லிப்' ஆன பிரணாப்!:
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசத் தொடங்கிய பிரணாப், இன்று காலை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடதுசாரிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது என்று ஆரம்பித்தார். அதைக்கேட்டதும் செய்தியாளர்கள் குழம்பினர்.
சட்டென்று தனது தடுமாற்றத்தை உணர்ந்து கொண்ட பிரணாப்முகர்ஜி, நோ, நோ, தப்பா சொல்லிட்டேன், அதை போட்றாதீங்க. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்தான் நடந்தது என்றார் சிரித்தபடி.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் அரசை கவிழ்த்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மஹபூபா முப்தியும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.