நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோற்க வேண்டும்: வெங்கையா நாயுடு
டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தோற்க வேண்டும். அதற்காக முழு பலத்தையும் பாஜக பயன்படுத்தும் என பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான்கு ஆண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இதுவரை இருந்த அரசுகளிலேயே மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட அரசாகும்.
மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் இந்த அரசு ஏமாற்றி விட்டது. அது மட்டுமல்லாமல், தோழமைக் கட்சிகளையும் மதிக்கத் தவறி விட்டது. இதனால் இடதுசாரிகள் தவிர வேறு பல தோழமைக் கட்சிகளும் கூட தங்களது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன.
நல்லாட்சி தர தவறிய இந்த அரசு, கூட்டணி தர்மத்தையும் கூட மீறி விட்டது. நாட்டின் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் கூட்டணிக் கட்சிகளின் கருத்துக்களையும், நம்பிக்கையையும் பெற தவறி விட்டது காங்கிரஸ்.
இடதுசாரிகளுடன் எங்களுக்கு கொள்கை ரீதியில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் இடதுசாரிகளுக்கு சர்வதேச அணு சக்தி ஒப்பந்த வரைவு நகலை காங்கிரஸ் அரசு காட்டாமல் மறைத்தது மிகப் பெரிய தவறு என்பது பாஜகவின் கருத்தாகும்.
இடதுசாரிகளை என்றில்லாமல், நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், நாட்டு மக்கள் என அனைத்து தரப்பினரையும் இந்த விஷயத்தில் இருளில் தள்ளி அவமதித்து விட்டது காங்கிரஸ் அரசு.
அணு சக்தி ஒப்பந்தம் நாட்டு நலனுக்கு உகந்ததாக இருந்தால் நிச்சயம் அதை பாஜக ஆதரித்திருக்கும். இதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் நாட்டு நலனில் சமரசம் செய்து கொள்ள பாஜக தயாராக இல்லை.
அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தம் என்பதால் இடதுசாரிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கலாம். ஆனால் நாங்கள் அப்படி எதிர்க்கவில்லை. நாட்டு நலனுக்கு இது நல்லதல்ல என்பதால் எதிர்க்கிறோம் என்றார் நாயுடு.












Click it and Unblock the Notifications